திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 29,800 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கோடிக்கணக்கான மக்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மத்திய அரசு கோவாக்ஸின், கோவிஷுல்டு என்ற இரண்டு தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் மூலமாக வழங்கி பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றது.

 

அதனடிப்படையில் தமிழ்நாட்டில் மாவட்டங்கள் தோறும் சுகாதாரத்துறை சார்பில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழ்நாட்டில் மூன்றாவது அலை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அரசு அதிவேகமாக தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தியது. அதனை முன்னிட்டு கடந்த 12-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி மாபெரும் முதல் முகாம் நடத்தப்பட்டது. அன்று ஒரே நாளில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 57121 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி  செலுத்தப்பட்டது. அன்று காலை 7 மணி முதல் 633 மையங்களில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.



இந்நிலையில் இரண்டாவது தவணை தடுப்பூசி மாபெரும் முகாம் இன்று திருவாரூர் மாவட்டத்தில் காலை முதல் தொடங்கி பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்றிலிருந்து தமிழக மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துகொள்ள அவசியம் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதனை அனைத்து மக்களிடம் எடுத்துசென்று அதன் மூலம் முழுமையான பயனை மக்களிடத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக எடுத்துக்கூறி செயலாற்றி வருகிறார்.

 

கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற முகாமில் திருவாரூர் மாவட்டத்தில் 633 இடங்களில் 57121 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  இம்முகாமில் இதுநாள்வரை தடுப்பூசி எடுத்துகொள்ளாதவர்கள், உலக நாடுகளையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மையும், சமுதாயத்தையும் பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டால்தான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்பதனை கருத்தில்கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசியை பொதுமக்கள் அனைவரும் செலுத்தி கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று இரண்டாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதல் 319 மையங்களில் 29,800 ஆயிரம் நபர்களுக்கு முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் திருவாரூர் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம்,  திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடத்தை நேரடியாக சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு முறையாக தடுப்பூசி செலுத்தப்படுகிறதா என்பது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட நாளிலிருந்து இன்று வரை 6 லட்சத்து 29 ஆயிரத்து 129 நபர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.