தஞ்சையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செயின் பறிக்கும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இதை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



தஞ்சை நாஞ்சிக்கோட்டை  சாலை பாத்திமாநகரை சேர்ந்தவர் பெலிக்ஸ். இவரது மனைவி சாலட்மேரி (63). இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் கடைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். வீட்டின் அருகே சென்ற போது பின்னார் பைக்கில் வந்த  மர்மநபர்கள் 2 பேர் சாலட்மேரி கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து தஞ்சை தெற்கு போலீசில் சாலட்மேரி புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் செயின் பறிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் போலீசார் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தரப்பில் கூறுகையில், வயதானவர்களை குறிவைத்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. சிசிடிவி காட்சிகள் இருப்பதால் இந்த மர்ம நபர்கள் பிடிப்பட்டு விடுவார்கள். பல இடங்களில் சிசிடிவி காட்சிகள் இல்லை. இதனால் மர்ம நபர்கள் பைக்குகளில் வந்து நகையை பறித்து செல்கின்றனர். முதியவர்கள் என்பதால் ஓடி வரவும் இயலாது. தடுமாறி விழுந்து பலர் அடிப்படவும் நேரிடுகிறது. எனவே இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பகல் பொழுதிலும் முக்கிய இடங்களில் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மின்சாரம் தாக்கி முதியவர் பலி: தஞ்சை அருகே மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வீரையன் (65). இவர் அந்த பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். சம்பவத்தன்று தன்னுடைய டீக்கடையில் உள்ள பாய்லருக்கான புகை கூண்டை மேல் நோக்கி வீரையன் தூக்கியுள்ளார்.

அப்போது கடையின் மேலே சென்ற மின்கம்பியில் புகை கூண்டு உரசியதில் வீரையன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரையன் இறந்தார். இதுகுறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.