தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பிரதான சாகுபடி நெல் சாகுபடி ஆகும். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக ஆண்டு குறுவை சம்பா தாளடி என 3 போகம் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டூர் அணை திறக்கப்படாத காரணத்தினாலும் பருவமழை பொய்த்துப் போன தன் காரணத்தினாலும் மூன்று போக சாகுபடி என்பது ஒரு போக சம்பா சாகுபடியை மட்டுமே விவசாயிகள் செய்து வந்தனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் காரணத்தினால் குருவை சாகுபடியை 9 ஆண்டுகளுக்குப் பின்னர் விவசாயிகள் மேற்கொண்டனர்.



இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் காரணத்தினால் தற்போது குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் குறைந்த அளவு தண்ணீர் வருவதால் தண்ணீர் திறப்பை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். விவசாயிகளுக்கு பல்வேறு விதங்களில் காப்பாற்றக்கூடிய பயிர் காப்பீடு திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படாமல் உள்ளது இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தாங்கள் பயிரிட்டுள்ள பயிர்கள் மழையின் காரணமாகவோ அல்லது பூச்சி தாக்குதல் காரணமாகவோ பாதிப்பு ஏற்பட்டால் அந்த நேரத்தில் எங்களுக்கு கை கொடுக்க கூடிய ஒரே விஷயம் பயிர் காப்பீடு திட்ட மட்டும்தான். ஆனால் இந்த ஆண்டு இதுவரை பயிர் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் இதுவரை அறிவிக்காமல் இருப்பது எங்களுக்கு பெருத்த ஏமாற்றமாக உள்ளது.

 

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பாரத பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி அதன்மூலம் காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் தொகையில் மத்திய அரசு ஒரு பங்கினையும், மாநில அரசு ஒரு பங்கினையும், பின்னர் விவசாயிகள் ஒரு பங்கினையும், ஒட்டு மொத்தமாக சேர்த்து காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்துவோம். பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து காப்பீட்டு ஊழியர்கள் விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வங்கிகள் மூலம் எங்களுக்கு கொடுத்து வந்தனர். இதன் மூலம் நாங்கள் செய்த செலவில் பாதி அளவு தொகையாவது எங்களுக்கு மீண்டும் வந்து சேரும் அதன் மூலம் அடுத்தகட்ட சாகுபடி பணிகளை தொடங்குவதற்கு வாய்ப்பாக இருக்கும். ஆனால் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து முதல்முறையாக இந்த ஆண்டு மட்டும்தான் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கக் கூடிய ஒரு விஷயம். தமிழ்நாடு அரசு இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



அதேநேரத்தில் நேற்று பயிர் காப்பீடு திட்டம் தொடர்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பயிர் காப்பீடு கட்டணத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பு முன்பு இருந்த படி மாற்றியமைக்க வேண்டும். காப்பீடு கட்டண மானியத்தில் ஒன்றிய அரசின் பங்கு குறைந்து இருப்பதால் தமிழ்நாடு அரசின் பங்கு 239 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசின் நடவடிக்கை பயிர் காப்பீடு திட்டத்தின் நோக்கத்தையே முடக்கி உள்ளதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் விவசாய நிலங்களின் பரப்பளவு தற்போது அதிகரித்துள்ளது. அதேபோன்று சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது இந்த காலகட்டங்களில் அவர்களுக்கு பயிர் காப்பீடு திட்டம் அவசியமான ஒன்று அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.



குறுவை சாகுபடி பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் உடனடியாக பயிர் காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய மாநில அரசுகள் அவசர தேவையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பருவ மாற்றத்தின் காரணத்தினால் பயிர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் விவசாயிகள் செய்த செலவு ஒட்டுமொத்தமாக கைக்கு வராமல் போகக்கூடிய நிலை உருவாகிவிடும் ஆகையால் பயிர் காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.