தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழுவினர்

  இரவில் ஆய்வு செய்தனர். தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெற் பயிர்கள், வீடுகள், சாலைகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன. இதுதொடர்பாக மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். இக்குழுவில் மத்திய உள் துறை இணைச் செயலர் ராஜிவ் சர்மா தலைமையில் வேளாண்மை, கூட்டுறவு, விவசாயிகள் நல துறை இயக்குனர் விஜய் ராஜ்மோகன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக மண்டல அலுவலர் ரனஞ்செய் சிங், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக சார்பு அலுவலர் எம்.வி.என். வரபிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தமிழக அரசின் சார்பில் வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்திரரெட்டி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது மேலாளர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.




தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட உக்கடை அருகே செவ்வாய்க்கிழமை மாலை பாதிக்கப்பட்ட பயிர்களையும், புகைப்படங்களையும் பார்வையிட்டனர். மேலும், மாவட்டத்தில் மழையால் ஏறத்தாழ 6,000 ஏக்கரில் சம்பா, தாளடி நெற் பயிர்கள் 33 சதவீதத்துக்கும் அதிகமாகப் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  விளக்கம் அளித்தார். மேலும், மாவட்டத்தில் தொடர் மழையால் தோட்டக்கலைப் பயிர்கள், 1,331 கூரை வீடுகள், 316 ஓட்டு வீடுகள் சேதமடைந்தது, 368 மாடுகள், 82 ஆடுகள், 5 எருமைகள் இறந்தது, ஆறுகள், வாய்க்கால்களில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் வழிந்தோடியது தொடர்பாக  விளக்கி கூறினார்.


அப்போது, தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெற் பயிர்கள், கரும்பு, வாழை தோட்டங்களில் தேங்கிய மழை நீர் வடியவில்லை என்றும், இதனால் பயிர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட வாழை, கரும்பு பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மனு அளித்தனர். இந்த ஆய்வின்போது,  தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் இராமலிங்கம், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை.சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் இருட்டாக இருந்ததால், மின்விளக்கை அமைத்திருந்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட வயல்களில் வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருந்தது. அதனை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.




ஒன்றுமே தெரியாத வயலில் என்ன நிலையில் உள்ளது என்று எப்படி பார்ப்பார்கள்,  இது போன்று இரவு நேரத்தில் வந்தால், மத்திய அரசிடமிருந்து எப்படி இழப்பீடு கிடைக்கும் என அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இது குறித்து விவசாயி ஜீவக்குமார், மத்திய குழுவினருடன் கூறுகையில், மழை சேதங்கள் ஏற்பட்ட பிறகு, வருடந்தோறும் சேதங்களை பார்வையிட மத்திய குழுவினர் வந்து பார்த்து விட்டு செல்கிறார்கள். ஆனால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை வழங்குவதில்லை.  இந்த முறையாவது விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டிற்கான காலத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும். கஜா புயலின் போது ஏற்பட்ட இழப்பிற்கான தொகையை இது நாள் வரை வழங்காமல் உள்ளதை உடனே  வழங்க வேண்டும்.  கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்க வேண்டும் என்றார்.