மயிலாடுதுறையில் விமரிசையாக நடந்த 38 ஆம் ஆண்டு படிபூஜை - திரளான பக்தர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை ஐயப்பன் ஆலயத்தில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற 38 -ஆம் ஆண்டு படி பூஜை மற்றும் 508 திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வியாபார செட்டி தெருவில் சுவாமி ஐயப்பன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 38 -வது ஆண்டாக சுவாமி ஐயப்பனுக்கு படி பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுமார் பதினைந்து அடி உயரத்தில் செயற்கையாக, 18 படிகள் அமைக்கப்பட்டன. அதன்மேல் சுவாமி ஐயப்பனின் பஞ்சலோகத் திருமேனி வைக்கப்பட்டு ஆராதனை செய்யப்பட்டது. 

Continues below advertisement


முன்னதாக 508 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பதினெட்டு படிகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு படிக்கும் விசேஷமான பூஜை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டடு, படிபூஜை செய்யப்பட்டது . தொடர்ந்து, ஐயப்ப சுவாமிக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் குருசாமி தமிழரசன் தலைமையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி விழாவின் பகல்பத்து நான்காம் நாள் பரிமள ரெங்கநாதர் ராமர் அலங்காரம் அலங்காரத்தில் எழுந்துருளி நடைபெற்ற படியேற்ற சேவையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பஞ்ச அரங்கங்களுல் ஒன்றானதும், 108 வைணவ ஆலயங்களுல் 22 ஆலயமான பரிமள ரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. சந்திரன் வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற இந்த ஆலயத்தின் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா கடந்த 23 -ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது. 


பகல்பத்து விழாவின் 4 -ம் நாளான நேற்று பெருமாள் ராமர் அலங்காரத்தில் புறப்பட்டு உள்பிரகார வீதியுலா வந்தார். திருவந்திக்காப்பு மண்டபத்தில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பெருமாளுக்கு உகந்த பாடலுடன்படியேற்ற சேவை நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை புதிய ஆட்சியர் அலுவலகம் மற்றும் பேருந்து நிலையம் அமைய உள்ள இடங்களில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தின் 38 -வது புதிய மாவட்டமாக மயிலாடுதுறை கடந்த 2020 -ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு டிசம்பர் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. மன்னம்பந்தல் ஊராட்சி பால்பண்ணை பகுதியில் நிரந்தர மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான தருமபுரம் ஆதீனத்தின் இடம் வாங்கப்பட்டு, அங்கு கட்டடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் நேரில் பார்வையிட்டார்.


தொடர்ந்து மணக்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு கட்டடம் மற்றும் சாலைகள் அமைய உள்ள இடங்களில் ஆரம்பகட்ட பணிகள் நடைபெறுவதையும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் பார்வையிட்டு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். 


மயிலாடுதுறை மக்களின் 25 ஆண்டுகால கனவுத்திட்டம் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இந்த பணி தற்போது தொடங்கியுள்ளது பணிகளை தரமானமுறையில் விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிகாரிகளிடம் ஆலோசனை வழங்கினார். உடன் நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் சிவக்குமார் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola