தஞ்சாவூர்: மாணவர்கள் குறைவாக உள்ள அரசு பள்ளி மாணவர்கள் விடுதியில், கல்லுாரி மாணவர்களும் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தெரிவித்தார்.


தஞ்சாவூரில், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லுாரியில், புதிதாக   கட்டப்பட்டு வரும் மாணவிகள் விடுதியை ஆய்வு செய்த பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


தஞ்சாவூர் அம்பேத்கர் பள்ளி மாணவர்கள் விடுதியும், குந்தவை நாச்சியார் கல்லூரியில் மாணவிகள் விடுதியும் ஆய்வு செய்யப்பட்டது. குந்தவை நாச்சியார் கல்லூரி மாணவிகள் விடுதியில் 50 பேர் தங்கும் அளவுக்கு கட்டப்பட்டு வருகிறது.


மாணவர்கள் குறைவாக உள்ள அரசு பள்ளி மாணவர்கள் விடுதியில், கல்லுாரி மாணவர்களும் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 336 விடுதிகள் பராமரிப்புக்கு, 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.


விடுதிகளில் உணவுகள் தரமாக இல்லை என புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதிதிராவிட விவசாயிகளுக்கு தட்கல் மூலம், கடந்த முதல் நிதியாண்டில், 837 விவசாயிகளுக்கு, கடந்தாண்டு ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.


வேங்கை வயல் விவகாரத்தில், சி.பி.சி.ஐ.டி., நீதிபதி சத்தியநாராயணன் என விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


விழுப்புரத்தில், திரௌபதி அம்மன் கோவில் தொடர்பாக, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில், உடன்பாடு எட்டவில்லை என்பதால் கோவில் பூட்டப்பட்டுள்ளது. விரைவில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


அரசு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ஏராளமாக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பு முதல் உயர் படிப்பினை தொடர்ந்து படித்தால், மேற்கண்ட கல்வி உதவித் தொகை அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வருட வருமானம் ரூ. 2.5 இலட்சத்திற்கு மேற்படாமல் இருப்பின் வழங்கப்படுகிறது. 


சமுதாய முன்னேற்றத்திற்கு கல்வி மிகவும் முக்கியமான காரணியாக விளங்குகிறது. இத்துறையைச் சார்ந்த மாணவிகளின் இடை நிற்றலை தடுப்பதற்கும் அவர்களின் கல்வி தரத்தை மென்மேலும் உயர்த்துவதற்கும் 100 விழுக்காடு பள்ளியில் சேர்வதை உறுதி செய்வதற்கும் மாணவிகளுக்கான கல்வி ஊக்கத் தொகைத் திட்டம் மாநில அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்துறையைச் சார்ந்த மாணவிகள் 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படித்தால் அவர்களுக்கு வருடந்தோறும் ரூ.500 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.


இத்துறையைச் சார்ந்த மாணவிகள் பயன் பெறும் வகையில் ஊக்கத் தொகைத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்துறையைச் சார்ந்த மாணவிகள் 6ம் வகுப்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்து படித்தால் அவர்களுக்கு வருடந்தோறும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் இத்துறையைச் சார்ந்த மாணவிகளுக்கு உதவித் தொகை வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.