தஞ்சாவூர்: திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த 108 வைணவ திவ்ய தேச கோயில்களில் ஏழாவதாக உள்ளது தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில். இக்கோயிலின் தனிச்சிறப்பு சிவனின் தோஷத்தையே போக்கிய தலம் என்பதுதான்.


சிவனின் தோஷத்தை போக்கிய தலம்


புகழ் பெற்ற “ஸ்ரீ கிருஷ்ண தரங்கிணி” எனும் நூலை எழுதிய நாராயண தீர்த்தர் இப்பகுதியில் கண்டியூர் அருகே இருக்கும் திருப்பூந்துருத்தியை சேர்ந்தவர். இத்தல இறைவன் மீது  அளவு கடந்த பக்தி செலுத்தியவராவார். திருமங்கையாழ்வார் இத்தல பெருமாளை ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், கோயிலடி ஆகிய ஊர்களில் இருக்கும் பெருமாளுடன் ஒப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளார்.


சிவனின் தோஷத்தையே போக்கிய தலம் என்பதால் உங்களுக்கு மற்றும் உங்கள் குலத்திற்கு ஏற்பட்டிருக்கும் எத்தகைய தோஷங்களும் இங்கு வழிபட அவை நீங்கி நன்மையுண்டாகும் என்று அனுபவம் பெற்றவர்கள் கூறுகிறார்கள். வேண்டுதல் நிறைவேறியவர்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். 




பிரம்மனுக்கு ஏற்பட்ட கர்வத்தால் விளைந்த தோஷம்


பிரம்மனுக்கு கர்வம் உண்டாக, அதனால் ஏற்பட்ட விளைவுகளால் சிவபெருமானுக்கு தோஷம் ஏற்பட்டு நீக்கிய கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் கோயில் பற்றிதான் தெரிந்து கொள்ளுங்கள். இக்கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான வாய்ந்ததாக கருதப்படுகிறது. இக்கோயில் இறைவனான திருமால் ஹரசாப விமோசன பெருமாள் எனவும் மூலவர் கமலநாதன் என்ற பெயரிலும், தாயார் கமலவல்லி நாச்சியார் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். இக்கோயிலின் தீர்த்தம் கபால மோட்ச புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது.


திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த கோயில்


புராண காலத்தில் இந்த ஊர் கண்டன சேத்திரம், பஞ்ச கமல சேத்திரம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த 108 வைணவ திவ்ய தேச கோயில்களில் ஏழாவதாக இக்கோயில் உள்ளது. சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்கிற ஐந்து திருமுகங்கள் இருந்தன. இதே போன்று படைப்பு கடவுளான பிரம்ம தேவனுக்கும் ஐந்து முகங்கள் இருந்தன. இதனால் கர்வம் அடைந்த பிரம்ம தேவன் சிவனை விட தான் உயர்ந்தவன் என கருதி சிவபெருமானை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டார். இதில் கோபமடைந்த சிவபெருமான் பிரம்ம தேவனின் ஐந்து தலைகளில் ஒன்றை கொய்தார்.


சிவனின் கையில் ஒட்டிக் கொண்ட கபாலம்


இதனால் சிவபெருமானுக்கு மனிதர்களை கொன்றால் ஏற்படும் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு, பிரம்மாவின் வெட்டப்பட்ட கபாலம் சிவனின் கைகளிலேயே ஒட்டிக்கொண்டது. இதைப்போக்க புறப்பட்ட போது விஷ்ணு கோயில் கொண்ட இத்தலத்திற்கு வந்தபோது சிவனின் கையிலிருந்த கபாலம் நீங்கியது.


ஹரன் எனப்படும் சிவனின் பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது  இதனால் இத்தல பெருமாள் ஹரசாப விமோசன பெருமாள் என அழைக்கப்படுகிறார். இக்கோயிலை மகாபலி சக்கரவத்தி கட்டியதாக கூறப்படுகிறது. இந்த ஊரில் கண்டீஸ்வரர் என்கிற பெயரில் சிவபெருமானும் கோயில் கொண்டுள்ளார்.


மும்மூர்த்தி தலமாக விளங்குகிறது


இந்த தலம் ஒரு மும்மூர்த்தி தலமாகும். பிரம்மனுக்கு தனி கோயில் இல்லை என்பதால் அவர் கண்டீஸ்வரர் சிவப்பெருமான் கோயிலில் சரஸ்வதி சமேதமாக அருள்பாலிக்கிறார்.


திருமங்கையாழ்வார் இத்தல பெருமாளை ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், கோயிலடி ஆகிய ஊர்களில் இருக்கும் பெருமாளுடன் ஒப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளார். சிவனின் தோஷத்தையே போக்கிய தலம் என்பதால் பக்தர்களுக்கு ஏற்பட்டிருக்கும் எத்தகைய தோஷங்களும் இங்கு வழிபட அவை நீங்கி நன்மையுண்டாகும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.