இந்திய நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதை அடுத்து வாக்காளர்கள் பட்டியலை தயாரிக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு 2024-க்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்யப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டார்.


வரைவு வாக்காளர் பட்டியலின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.




அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 3,65,735 எனவும், பெண் வாக்காளர்கள் 3,72,128 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 20 என மாவட்டம் முழுவதும் 7,37,883 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதியதாக 7393 பேர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 33,650 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும்  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விரும்பும் நபர்கள் தொடர்ந்து உரிய படிவங்களை  தொடர்புடைய அலுவலங்களில் சமர்ப்பித்தோ அல்லது இணையதள மூலமும் பதிவு செய்து  பயன்பெறலாம் எனவும் , அதற்காக சிறப்பு முகாம்கள் செயல்படும் எனவும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.




தொகுதி வாரியாக வாக்காளர்கள் விபரம்:


மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 11, 7325 பெண் வாக்காளர்கள் 11,9650 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 9 பேர் என மொத்தம் 2,36,984 வாக்காளர்கள் உள்ளனர்.


சீர்காழி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,24,834 பெண் வாக்காளர்கள் 1,28,663 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 7 பேர் என மொத்தம் 2,36,984 வாக்காளர்கள் உள்ளனர்.


பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,34,669 பெண் வாக்காளர்கள் 1,38,979 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 4 பேர் என மொத்தம் 2,73,652 வாக்காளர்கள் உள்ளனர். 




மேலும் கடந்த பத்து மாதங்களில் மட்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் டபுள் என்ட்ரி, இறப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 33 ஆயிரத்து 650 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் வாக்கு சாவடி மையங்களில் 27.10.2023 முதல் 09.12.2023 வரை  அனைத்து வேலை நாட்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கல் /  திருத்தல் தொடர்பான படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும்.


சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள்


மேலும் 04.11.2023, 05.11.2023 மற்றும் 18.11.2023. 19.11.2023 ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கல் / திருத்தல் தொடர்பான சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது.




வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம்


வாக்காளர் பட்டியல்  மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / வட்டாட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் அலுவலக நேரங்களில் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம் என மயிலாடுதுறை மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான மகாபாரதி தெரிவித்துள்ளார்.