மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா எலந்தங்குடி கிராமத்தில், இஸ்லாமிய ஜமாத் நிர்வாகத்தினர் சட்டத்திற்கு புறம்பாக 18 இஸ்லாமிய குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக ஒலிபெருக்கியில் பேசும் ஆதாரங்களுடன்  மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்கிடம் பாதிக்கப்பட்ட அப்துல் வக்கீல், முகம்மது பாரூக், ஜலாலுதீன், சம்சுதீன் ஆகிய நான்கு குடும்பத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.




எலந்தங்குடி மஸ்ஜித் ரஹ்மத்தின் கீழ் வசித்துவரும் 18 குடும்பத்தை சேர்ந்தவர்களை தற்போது ஜமாத் பொறுப்பில் இருப்பவர்கள் சட்ட விரோதமாக ஊர்நீக்கம் செய்து வைத்துள்ளனர். எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு யாரும் கலந்துகொள்ள கூடாது, வீடு மற்றும் கடைகளில் வாடகைக்கு இருப்பவர்களையும் வெளியேற வேண்டும் இல்லை என்றால் அவர்களையும் ஊர்நீக்கம் செய்துவிடுவோம் என்று மிரட்டுவதோடு, உறவினர்கள், உடன்பிறந்த சகோதரர்கள் வீட்டு திருமண நிகழ்வுகளுக்கு கூட ஊர்நீக்கம் செய்யப்பட்ட 18 குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கக்கூடாது என்று ஒலிப்பெருக்கியில் அறிவிக்கின்றனர். 




ஜமாத் கணக்குவழக்குகளை முறையாக தெரிவிக்காமல் மக்களை மிரட்டி ஒற்றுமையாக வாழக்கூடிய எங்களிடம் கலவரத்தை ஜமாத் தலைவர் செய்து வருகிறார். வரதட்சணை வாங்குதல் உள்ளிட்ட சமூக தீமைகள், சமாதி வழிபாடு உள்ளிட்ட மூட நம்பிக்கைகளை பின்பற்றாமல் அது தவறு என்ற அடிப்படையில் எங்கள் வழிபாடுகளை செய்து வருகிறோம். இதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக ஊர்நீக்கம் செய்து எங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பவர்கள் மீது, உரிய விசாரணை மேற்கொண்டு எங்கள் மீது போடப்பட்டுள்ள ஊர்நீக்கத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளனர். வக்பு வாரிய சட்டதிட்டங்களுக்கு முரணாக தங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.




சட்டத்திற்கு புறம்பாக ஒரே கிராமத்தில் 18 குடும்பத்தினரை ஊர் நீக்கம் செய்து அதனை ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்த சம்பவம் மயிலாடுதுறை சுற்று வட்டார பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று கடந்த மாதம் சீர்காழி அருகே மீனவர் கிராமத்தில் ஆறு குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து அது தொடர்பாக மனித உரிமை ஆணையம் வட்ட ஆட்சியருக்கு விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில் மீண்டும் அதே போன்ற ஒரு பிரச்சனை தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் சட்டத்துக்கு விரோதமாக இதுபோன்ற நடவடிக்கைகள் மயிலாடுதுறையில் பல இடங்களில் நடைபெறுவதாகவும் ஒரு சிலர் மட்டுமே துணிந்து புகார் அளித்ததாகவும் பலரும் புகார் அளிக்க பயந்து ஊரை விட்டு ஒதுங்கி பல இன்னல்களை சந்தித்து வருவதாகவும் இதுகுறித்து அரசு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.