திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் அனிதா தம்பதியினரின் 7 வயது மகன் யுவனேஷ். வீரப்பன் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் யுவனேஷ் சிறுநீரக கோளாறல் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சிறுவனின் உடல்நிலை மோசமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து பெற்றோர்கள் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி திருச்சி  தனியார் மருத்துவமனையில் சிறுவனை மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிறுவனுக்கு 53 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதுவரை பெற்றோர்கள் தனியார் மருத்துவமனையில் ஒன்பது லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் மேலும் 2 லட்சம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் கேட்டுள்ளனர்.




அதற்கு பெற்றோர்கள், வீடு நிலம் போன்றவற்றை அடமானம் வைத்தும் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக பணத்தை சேகரித்து தான்  இந்த பணத்தை கட்டி உள்ளோம். மேலும் 2 லட்சம் ரூபாய் கட்டுவதற்கு தங்களிடம் வசதி இல்லை எனவே சிறுவனை அரசு மருத்துவமனையில் சேர்த்து பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு வாரம் கழித்த நிலையில் இன்று அதிகாலை சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் சிறுவனின் உடலை தருமாறு கேட்டதற்கு மேலும் 11 லட்சம் ரூபாய் பணம் கட்டினால் உடலை தருவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து செய்வதறியாது திகைத்த பெற்றோர் உறவினர்கள் உதவியுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு சிறுவனின் தாய் கதறி அழுதது காண்போர் நெஞ்சை உலுக்கும் விதமாக இருந்தது.




தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் சிறுவனின் பெற்றோர்கள் சிறுவனின் உடலை மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்து மீட்டுத் தருமாறு கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த சம்பவம் நாரணமங்கலம் பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெற்றோர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தது சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு தெரிந்த நிலையில், நேற்று நள்ளிரவு பணம் நிபந்தனை இல்லாமல் சிறுவனின் உடலை மருத்துவமனை நிர்வாகம் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர் நல்லடக்கம் செய்ய சொந்த ஊரான நாரணமங்கலம் பகுதிக்கு சிறுவனின் உடல் கொண்டுவரப்பட்டது. அப்போது குழந்தையின் தாய் மற்றும் ஊர் மக்கள் கதறிய காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானம் இல்லாத முறையில் தனியார் மருத்துவமனை உயிரிழந்த சிறுவனின் உடலை கொடுக்காமல் பெற்றோரை அலைக்கழித்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தியது. தற்பொழுது சிறுவனின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக கொண்டு வந்த பொழுது அந்த கிராமமே ஒன்று திரண்டு கண்ணீர் மல்க சிறுவனுக்கு விடை அளித்த சம்பவம் பார்ப்போரை கண் கலங்க வைத்தது.