தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கி சுமார் ஒருமாத காலமாக நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை சில தினங்களாக தீவிரம் அடைந்துள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 




இம்மாத தொடக்கத்தில் பெய்த கனமழையால் மாவட்டம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பின்னர் அவ்வப்போது ஒரு சில தினங்கள் மழைப்பொழிவு என்பது இல்லாமல் காணப்பட்டது இதன் விளைவாக, வயல்வெளிகளில்  தேங்கிய மழைநீர் ஆனது பல இடங்களில் வடிய துவங்கியது. இதனால் சற்று நிம்மதி அடைந்த விவசாயிகளுக்கு மீண்டும் பேரிடியாக தற்போது மூன்று நாளாக பெய்யும் கன மழையில் மயிலாடுதுறை மாவட்டத்தில், பொன்னூர், பாண்டூர், மகாராஜபுரம், அருண்மொழித்தேவன் உள்ளிட்ட கிராமங்களில் மழை நீர் வடிய வழியின்றி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் நீரில் மீண்டும்  மூழ்கியுள்ளது. 




கடந்த மழையின்போது நீரில் மூழ்கிய பயிர்களை விவசாயிகள் நீரை வடிய வைத்து அடியுரங்களை இட்டு காப்பாற்றி வரும் நிலையில், தற்போது மூன்றாவது முறையாக பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால், பயிர்களில் விளைச்சல் குறைந்து பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இப்பகுதிக்கு வடிகால் வாய்க்காலாக விளங்கும் எல்லை வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாததே மழைநீர் வடியாததற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே எல்லை வாய்க்காலை தூர் வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள விவசாயிகள், பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி வீணாகிவிட்டதால், அரசு அறிவித்துள்ள இடுபொருள் தங்களுக்கு தேவையில்லை என்றும், ஏக்கருக்கு ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 




கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்


அதுமட்டுமின்றி கடந்த ஆண்டும் சற்றும் எதிர்பாராதவிதமாக மார்கழி மழையானது பெய்து அறுவடை நேரத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்றும், இந்தாண்டு சம்பா சாகுபடி செய்த நாள் முதல் மழை பதிவானது இருந்து வருவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் என்பது முற்றிலும் அழிந்துள்ளதாகவும், இதனை அரசு உரிய முறையில் கணக்கிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க முழுமையான நிவாரணத்தை அறிவித்தது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.