கும்பகோணத்தில் 10 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம். 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சான்றிதழ்கள் எரிந்து சேதம்

 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை, முகுந்தநல்லூர், கோட்டை சிவன் கோயிலில் 20க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை 10.30 மணி அளவில் அங்குள்ள குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது பலமான காற்று வீசியதால் அருகிலுள்ள குடிசை வீடுகளில் மளமளவென தீ பரவியது. இதனால் சுமார் 10 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து கும்பகோணம் தீயணைப்பு துறையினருக்கு அருகில் உள்ள பொதுமக்கள் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் கும்பகோணம் தீயணைப்பு துறை வீரர்கள் 3  தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இது குறித்து தகவலறிந்த டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.



குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்தது தொடர்பாக நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி தகவலறிந்த கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் சம்பவ இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசு நிவாரண பொருட்கள் மற்றும் சொந்த நிதியை வழங்கினார். தீ விபத்தில், மிக்ஸி, கிரைண்டர், ஃபேன்  மற்றும் மாணவர்களின் பள்ளி கல்லூரி சான்றிதல்கள் ஆகியவை தீயில் முற்றிலும் எரிந்துவிட்டது மேலும் சுமார் ரூ. 5 இலட்சம் வரை பொருட்கள் மற்றும் ரேஷன் கார்டு சான்றிதழ்கள், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் எரிந்து நாசமாகி உள்ளன



இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில்...

 

கோட்டை சிவன் கோவில் அருகில் புறம்போக்கு நிலத்தை அப்பகுதியில் உள்ள ஒருவர் ஆக்கிரமித்து உள்ளார். இன்று காலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்த  மூங்கில் மரத்தை தீயிட்டுக் கொளுத்திய போது மூங்கில் மரத்திலிருந்து பரவிய தீ அருகில் உள்ள குடிசை வீடுகள் பற்றி வீடுகள் எரிந்து உள்ளது என முதல்கட்டமாக தெரியவந்துள்ளது என தெரிவித்தனர். மேலும் அந்தப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எதார்த்தமாக தீப்பற்றியது அல்லது வேண்டும் என்று குடிசைகளுக்கு தீ வைப்பதற்காக இதே போன்ற சம்பவங்களில் யாரேனும் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஒரே பகுதியில் 10 குடிசை வீடுகள் தீப்பற்றி முழுவதும் எரிந்து சேதமானது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது