சென்னை விமான நிலையத்திற்கு நேற்று துபாயில் இருந்து வந்த விமானத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த மெகபூப் அக்பர் அலி, 35, சென்னையை சேர்ந்த சுபைர் உசேன், 25 ஆகியோர் வந்திருந்தனர்.   அவர்களின் தலைமுடி மிகவும் வித்தியாசமாக இருந்ததால் இருவரையும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் இருவரும் தங்களது தலையின் நடுப்பகுதியில்  முடியை சவரம் செய்து, அதற்கு பதிலாக `விக்’ வைத்து இருப்பது தெரிந்தது. பின்னர், அந்த ‘விக்’கை பிரித்து பார்த்தபோது, ‘விக்’கின் அடியில் கருப்பு நிற டேப்பால் சுற்றப்பட்ட நிலையில் இருவரும் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.  அவர்கள் இருவரையும் கைது செய்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள 595 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.




விக் 


மேலும், மற்றொரு துபாய் விமானத்தில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சையத் அகமதுல்லா,22, சேலத்தை சேர்ந்த சந்தோஷ் செல்வம்,33, சென்னையை சேர்ந்த அப்துல்லா,35 ஆகியோரும் இதே பாணியில் ‘விக்’கின் அடியில் மறைத்து கடத்தி வந்த ரூ.96 லட்சத்து 57 ஆயிரம் மதிப்புள்ள 2.80  கிலோகிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் துபாயில் இருந்து வந்த திருச்சியை சேர்ந்த பாலு கணேசன்,24, தனது உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.26 லட்சம் மதிப்புள்ள 622 கிராம் தங்கத்தையும், துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த ரூ.43 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 933 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதுதவிர, துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த அன்பழகன்,24 என்பவர் தனது சாக்ஸ் மற்றும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.62 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 330 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து கடத்தல் தங்கத்தை வாங்க வந்த தமீம் அன்சாரி, 25 என்பவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 


5.50 கிலோ தங்கம்


இதுதவிர, சென்னையில் இருந்து சார்ஜாவுக்கு செல்ல வந்த 4 பேரின் தலைமுடி ‘விக்’குகளில் மறைத்து கடத்திச்செல்ல முயன்ற ரூ.24 லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள சவுதி ரியால்கள், அமெரிக்க டாலர்கள் உள்பட வெளிநாட்டு பணத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2 கோடியே 53 லட்சம் மதிப்புள்ள 5.500 கிலோ கிராம் தங்கம், ரூ.24 லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் கடத்தலில் ஈடுபட்ட 12 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  அயன் பட பாணியில் விமான நிலையத்தில் தங்கத்தை கடத்த முயன்ற சம்பவம் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.