செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு நடிகை யாஷிகா ஆனந்த் விபத்தில் சிக்கினார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பவனி என்ற பெண் தோழி மற்றும் சையது, அமீர், ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு, பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார் யாஷிகா. பின்பு பாண்டிச்சேரியிலிருந்து  தனது நண்பர்களுடன் சென்னை  கிழக்குக் கடற்கரை சாலை வழியாக  சென்னை நோக்கி வந்துள்ளார். காரை யாஷிகா ஆனந்த் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, சூளேரிக்காடு பகுதியில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் சென்டர் மீடியனில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 




இதில், நடிகையின் பெண் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு பூஞ்சேரியில் உள்ள விபத்து முதலுதவி சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தற்போது சென்னை அடையாறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது நடிகை யாஷிகாவிற்கு இடுப்பு மற்றும் கால் எலும்புகள் முறிந்து உள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மகாபலிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் யாஷிகா தற்போது எப்படி உள்ளார். என அவரது தாயார் சோனல் ஆனந்த் தெரிவித்துள்ளார். அதில் ''கால் பகுதியிலும், இடுப்பு பகுதியிலும் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. யாஷிகா தான் கார் ஓட்டினார். போலீசார் வழக்குகள் குறித்து எனக்கும் எதுவும் தெரியாது. யாஷிகாவின் தோழி இறந்த விஷயம் யாஷிகாவுக்கு தெரியாது. அதிர்ச்சியான விவரத்தை யாஷிகாவிடம் தெரிவிக்க வேண்டாமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் கூறவில்லை'' என்றார். மேலும் யாஷிகாவின் தோழி குறித்தும் அவர் குறிப்பிட்டார்.



முன்னதாக, சம்பவம் குறித்து யாஷிகாவிடம், மகாபலிபுரம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றனர். அதில்,யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்தபோது , திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததால், விபத்துக்குள்ளானதாகவும் அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி சீட்பெல்ட் அணியாததால், காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும், மேலும் விபத்து நடந்த பிறகு ரத்த வெள்ளத்தில் இருந்த நண்பர்களை காப்பாற்ற கூச்சல் போட்டதாகவும் அவருடைய வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது. அதே சமயம் அவர் மதுபோதையில் இல்லை எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 


கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை யாஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின்னர், இருட்டு அறையில் முரட்டு குத்து, ராஜ பீமா, இவன் தான், நோட்டா, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் மேலும் "கடமை செய்" ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும், குறைந்த அளவில் படங்கள் நடித்திருந்தாலும், யாஷிகா சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருவதால், அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.