சேலம் மாநகர் பழைய பேருந்து நிலையம் முகமதுபுறா குடியிருப்பு பகுதியில் இன்று காலை ஆவின் பால் பொதுமக்கள் வாங்கி சென்றனர். அந்த பாலை பாத்திரத்தில் ஊற்றிய போது புழு இருந்ததாகவும் மற்றொரு பால் பாக்கெட் பிரித்து ஊற்றிய பொழுது அதிலும் புழுக்கள் இருந்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பாத்திரத்துடன் பாலை கொண்டு வந்து கடைக்காரரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


சேலம் ஆவின் நிறுவனத்தில் இருந்து வழங்கப்படும் இந்த பால் பாக்கெட்டுகள் இன்றைய தேதியில் அச்சிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பால் பாக்கெட்டுகளில் புழுக்கள் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தரமற்ற முறையில் ஆவின் பால் தயாரிக்கும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் இந்த ஆவின் பாலை தரமான முறையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.



தகவல் அறிந்து உடனடியாக முகமது புறா தெருவில் வ.உ.சி. பின்புறம் உள்ள பகுதியில் சௌகத் என்பவரின் வீட்டில் ஆவின் பொது மேலாளர், தரக்கட்டுபாடு AGM மற்றும் உதவி பொது மேலாளர் (உற்பத்தி), பால் பொட்டல பிரிவு (துணை மேலாளர்) மற்றும் விற்பனை அலுவலர்கள் உணவு பாதுகாப்பு அலுவலர் அனைவரும் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பால் பாக்கெட்டுகளில் புழு இருந்தாக குற்றச்சாட்டு தெரிவித்த நபரிடம் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை மேற்க்கொண்ட பொழுது பால் பாக்கெட்டில் புழு உள்ளதாக கூறியதையடுத்து அவர்களிடம் அப்பால் பாக்கெட்டை கேட்ட பொழுது அவற்றை கீழே ஊற்றி விட்டோம் என தெரிவித்தார்கள். 



மேலும் முகமது புறா தெருவில் விற்பனை செய்யும் விற்பனையாளரிடம் நான்கு பாக்கெட்டுகள் (2 பாக்கெட் டிலைட் மற்றும் 2 கோல்டு பாக்கெட்) வாங்கி குற்றம் சாட்டிய நபர் முன்பே வடிகட்டி வைத்து பாலை கட் செய்து ஊற்றி அதில் எவ்வித குறைபாடும் இல்லை என உறுதி படுத்தப்பட்டுள்ளது.


மேலும் சௌகத் என்பவரும், இது தொடர்பான செய்தி கொடுத்த சாதிக் என்பவருக்கும் பிற கடைகளில் இருந்து வாங்கி வந்த பால் பாக்கெட்டுகளை வடிகட்டி காட்டியதில், ஆவின் பால் பாக்கெட்டுகளில் குறைபாடு இல்லை என்பதை தெளிவாக தெரிந்து கொண்டனர். மாநகரத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், ஆவின் வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோரிடமிருந்து எவ்வித குற்றச்சாட்டும் பெறப்படவில்லை என விளக்கம் அளித்தனர். 


இதனைத் தொடர்ந்து, புகார் தெரிவித்த சௌகத் மற்றும் சாதிக் இருவரும் தங்களது புகாரை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.