ஓவ்வொரு வருடமும் ஜூன் 5ம் தேதியை உலக நாடுகள் உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடுகின்ற. சுற்றுச்சூழல்  பாதுக்காப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதில் இந்த நாள் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு சந்திக்கும் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்னைகள் சிலவற்றை இங்கே காண்போம். 

  


புவி வெப்பமடைதல்:  புவி வெப்பமடைதலால் மிக மோசமான பின்விளைவுகளை தமிழ்நாடு சந்திக்க நேரிடும் என்று பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டி வருகின்றன.இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கடல்பகுதி நிறைந்த மாநிலம் தமிழ்நாடு. கிட்டத்தட்ட, பல லட்சத்துக்கும்  அதிகமான மக்கள் கடல் பகுதி ஒட்டிய 50 கி.மீ சதுரத்துக்குள் வாழ்ந்து வருகின்றனர். புவி வெப்பமடைவதால் ஏற்படும் கடல்நீர் மட்ட உயர்வால் கடல்பகுதி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் நிலப்பகுதிகளில் ஏற்படும் உப்புப் படிவங்களால் வேளாண்மை மற்றும் குடிநீர் உபயோகம் முற்றிலுமாக பாதிக்கப்படும். 




புவிவெப்பமடைதல் காரணமாக அரியலூர், சென்னை, கோயம்பத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 2070- 2100 கால இடைவெளியில் அதிகபட்ச சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அளவு உயரும் என்று கணிக்கப்படுகிறது.            


புவிவெப்பத்தினால் தமிழகத்தில் இயற்கையான சமன்பாடுகளுடன் இருந்த மழை அளவு, மழை காலம், குளிர் ஆகியவை அசாதாரணமாக உயர்ந்து வருகின்றன. உதாரணமாக, கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் ஏற்படும் தீவிர மற்றும் அதிதீவிர புயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.



மேலும், வடகிழக்குப் பருவ மழையின் போது தமிழ்நாட்டில் வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக அதிக மழை பதிவாகி வருகிறது. வருடாந்திரம் பொழியும் மலை அளவிலும் அதிகப்படியான மாற்றங்கள் காணப்படுகின்றன.             


சதுப்புக் காடுகள்:  ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் சேறு கலந்த சதுப்பு நிலங்களில் அலையாத்தி காடுகள் வளர்கின்றன.இதுபோன்ற நில அமைப்பை சதுப்புக் காடுகள் (Mangrove Forest) என்று அழைக்கப்படுகின்றன.


இக்காடுகள் கடல் அலைகள் உள்ளே வராமலும், கடல்நீர் கரையில் உள்ள நிலத்தின் மண்ணை அரித்து நிலத்தினுள் புகுந்து விடாமல் தடுத்து நிலத்தை காத்துவருக்கின்றன. 


தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் உள்ள சதுப்புக் காடுகள் இந்தியாவில் இரண்டாவது பெரிய  காடாகும். இதில் 20க்கு மேல் வேறுப்பட்ட அலையாத்தி மரங்கள் காணப்படுன்றன் அதில் குறிப்பாக தில்லை மரம் (ரைசோபோரா (Rhizophora)) அதிகமாக காணப்படுகின்றன. 


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சதுப்பு நிலக்காடுகளாகும். இது திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இடையில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 119 கிலோ மீட்டர். முத்துப்பேட்டை மாங்குரோவ் காடுகள் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளைவிட 10 மடங்கு பெரியது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாங்குரோவ் காடுகள் இவை.




மேலும் சென்னையில் உள்ள எண்ணூர் துறைமுக அருகிலும் இம்மரங்கள் வளர்ந்து வருக்கின்றன. சென்னையை ஒட்டியுள்ள பள்ளிக்கரணையும் பல்லுயிர்வளம் நிறைத்த சதுப்பு நிலப்பகுதியாகும். மேலும், கிழக்கு கடற்கரை சாலைகளில் குறிப்பாக முத்துக்காடு, கோவளம் மற்றும் மாமலப்புரத்தில் ஒரு சில மரங்கள் வளர்ந்து வருகின்றன. 


சந்திக்கும் பிரச்சனைகள்: 


சதுப்புக் காடுகளில் வளரும் மரங்கள் தங்கள் வேர்களிலும் தண்டுகளிலும் உள்ள சிறிய துளைகள் மூலம் காற்றை உறிஞ்சி காற்றில் உள்ள கார்பனை எடுத்துக்கொண்டு அதிக ஆக்சிஜனை வெளியிடுகிறது. இதன் மூலம், வளிமண்டலத்தில் இருக்க கூடிய கரியமிலவாயுவை உள்வாங்கி வளிமண்டலத்தில்  வெப்பத்தைக் குறைத்து புவிவெப்பமடைதலை தவிர்க்கிறது.   


சட்டவிரோத ஆற்று மணல்கொள்ளை, வழித்தட ஆக்கிரமிப்பு, புவி வெப்பமயமாதல், பிளாஸ்டிக்  மாசுபாடு போன்ற பிரச்சனைகளை சதுப்புக் காடுகள் சந்தித்து வருகின்றன.