மதுரையில் இருந்து தூத்துக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையை 130 கோடி ரூபாய் செலவில், புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக, விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவியூரில் இருந்து பந்தல்குடி வரை, சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டு ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. சாலை புதுப்பிக்கப்பட்டு, சென்டர் மீடியனும் உயர்த்தப்பட்டால் விபத்துக்கள் குறையும் எனக் கூறப்படுகிறது.
மதுரை – தூத்துக்குடி நான்கு வழிசாலை எப்போதும் சற்று பரபரப்பாக காணப்படும் சாலை. தூத்துக்குடியிலிருந்து வடதமிழகத்திற்கு வரும் பெரும்பாலான வாகனங்கள் மதுரையை கடந்து தான் செல்ல வேண்டும். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்தும் பெரும்பாலான லாரிகள் மதுரை வழியாகத்தான் பல்வேறு மாவட்டங்களுக்கும் வந்து செல்கின்றன.
லாரிகள் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் சாலையில் தரமும் கேள்வி குறியாகியுள்ளது. ஆங்காங்கே சாலைகள் மேடு, பள்ளமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஒரு தேசிய நெடுஞ்சாலையே இந்த அளவுக்கு இருப்பதால் மக்கள் கேள்வி எழுப்பினர்.
மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலை அருகே விபத்துகளும் அடிக்கடி நடந்த வண்ணம் இருக்கின்றன. காரியாப்பட்டி, விருதுநகர், அருப்புக்கோட்டை செல்லும் வாகனங்களும் இந்த சாலையைத்தான் பயன்படுத்த வேண்டி உள்ளது. அன்றாடம் வேலைக்கு சென்று வருபவர்கள் கூட மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
காரியாபட்டி அருகே வக்கனாங்குண்டு பகுதியில் தொடங்கி அருப்புக் கோட்டை அருகே பந்தல்குடி வரை சாலை பராமரிப்புப் பணிகள் கடந்த ஒரு மாதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனியார் மூலம் ரூ.130 கோடி செலவில் இப்பணிகள்மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.
சாலை சீரமைப்பு பணிக்காக ஏற்கெனவே இருந்த தார் சாலைகள் சுரண்டி எடுக்கப்பட்டுள்ளது. சாலையில் உள்ள தூசுகள், துகள்கள் கம்பிரசர் இயந்திரங்களைக் கொண்டு அகற்றப்படுகின்றன.
இதனால் சாலையில் வாகனங்கள் இயக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவியூரில் இருந்து பந்தல்குடி வரை, சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டு ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
சாலையின் நடுவே தடுப்புகள் இல்லாததாலும், வளைவுகளில் எச்சரிக்கை பலகைகள் இல்லாததாலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து லாரி ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், “தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கும் லாரி ஓட்டி வருகிறேன். மதுரை – தூத்துக்குடி நான்குவழிச்சாலை மிகவும் மோசமாக உள்ளது.
சாலை போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளன. ஆனால் தடுப்பு பலகைகள், எச்சரிக்கை பலகைகள் இல்லாமல் இருக்கிறது. இதனால் இரவில் வரும்போது சரியாக சாலை தெரியவில்லை. சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறும் பகுதிகளில் முறையான எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.