நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை 2012 ஆம் ஆண்டே வாபஸ் பெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என விளக்கம் அளிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சீமான் - விஜயலட்சுமி விவகாரம்:


 சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாக  பிரபல நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கத்தில் புகாரளித்து பின் அதனை திரும்பப் பெற்றார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் மீண்டும் தனது புகாரை விசாரிக்க கோரி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகாரளித்தார்.  இதனைத் தொடர்ந்து  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.


இந்நிலையில்  கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி சீமான் மீது தான் அளித்த புகாரை திரும்பப் பெறுவதாக கூறினார் விஜயலட்சுமி. இதனைத் தொடர்ந்து தன் சார்பில் இருந்து விளக்கம் தரும் வகையில் தாமாக முன்வந்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார் சீமான்.


சீமான் விளக்கம்:


அப்போது பேசிய அவர், “விஜயலட்சுமிக்கு 8 முறை கருகலைப்பு செய்தேன் என்பது மிகப்பெரிய நகைச்சுவை. வீரலட்சுமி என் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் பதில் அளிக்க வேண்டும். விஜயலட்சுமி, வீரலட்சுமியால் நான் தான் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளேன். என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவித்த வீரலட்சுமி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார். 


இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும்,  விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகக் கூறியுள்ளார்.


திமுக அரசுக்கு எதிராகவும், திராவிட கொள்கைக்கு எதிராகவும் கருத்துக்கள் கூறி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 2011ல் முடிக்கப்பட்ட வழக்கை, 12 ஆண்டுகளுக்கு பின், அரசியல் உள்நோக்கத்துடன் மீண்டும் விசாரிப்பதால், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.


காவல்துறை விளக்கம் அளிக்க உத்தரவு:


இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, 2011ல் அளித்த புகாரை 2012ல் விஜயலட்சுமி வாபஸ் பெற்ற நிலையில், 2023ல் புதிதாக புகார் அளித்து, அதுவும் ஒரு மாதத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


ஆனால், மனு நகல் தரப்படவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மனு நகலை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 2011 மற்றும் 2023ல் விஜயலட்சுமி அளித்த புகார்கள் மற்றும் வாபஸ் பெறப்பட்ட விவரங்களை காவல்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, 2011ல் அளித்த புகாரை  வாபஸ் பெறப்பட்ட நிலையில் வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்றும் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.


Womens Reservation Bill: மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டுவர ஏன் காலதாமதம்..? விவாதத்தின்போது கனிமொழி எம்.பி கேள்வி..