கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பருவ மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி்குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன், கோவை மக்களவை உறுப்பினர் ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 



இந்த கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது, "பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர், துணை முதல்வர் வழிகாட்டுதல் கொடுத்து இருக்கின்றனர். கோவையில் இரு தினங்களில் பெய்த மழை காரணமாக கோவையில் மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாத வகையில் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பெரிய அளவில் மழை பெய்தாலும் ஒரு சில மணி நேரங்களில் தண்ணீர் அகற்றப்பட்டு இயல்பு நிலைக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


மழையை எதிர்கொள்ளும் வகையில் கடந்த மே மாதம் முதலே தேவையான பணிகளை செய்து வருகின்றோம் எனவும் தெரிவித்தார். கோவையில் மழை பாதிப்புகள் குறித்த செய்திகளை வெளியிடுவதை போல, அரசு மேற்கொள்ளும் துரித நடவடிக்கைகள் குறித்தும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஒரு தரப்பு செய்தியை மட்டும் வெளியிடுவது போல தோற்றம் இருக்கின்றது என்பது என் கருத்து எனவும் தெரிவித்தார்.


மழை பாதிப்பு குறித்து வெளியிடப்படும் செய்திகளை கவனத்தில் எடுத்து கொள்கின்றோம். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை செய்தியாக்க வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள் எனவும் தெரிவித்தார்.


கோவையில் மழை நீர் தேங்கும் இடங்கள் என 6 இடங்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றது. அந்த இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. சுரங்கப்பாதைகளில் மழை நீர் பாதிப்பு இருக்கும் இடங்களில் எந்த வாகனம் செல்ல முடியும் என்பதை தெரிவிக்கும் விதமாக கலர் மார்க் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.



ஏற்கனவே மின்சார துறை பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை உட்பட அனைத்து இடங்களிலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இருக்காது என்றார். உயிர் இழப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. இதுவரை மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை. சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றது. மின்வாரியம் சார்பில் மரக்கிளைகள் அகற்றுவது என 15 லட்சம் பணிகள் நடைபெற்றுள்ளது என தெரிவித்த அவர், மின் கம்பிகள் அறுந்து உயிர் சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்படுத்தபடுகின்றது.


மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் கடந்த காலங்களை விட தற்போது உயிர்சேதங்கள் குறைந்து இருக்கிகறது. வரும் ஆண்டுகளில் இது போன்ற பாதிப்புகள் இருக்காது. தமிழகம் முழுவதும் மின்வாரிய அதிகரிகள் மற்றும் உயர்அதிகாரிகள் கொண்ட வாட்ஸ் அப் குழுக்கள் ஏற்படுத்தபட்டு பாதிப்புகள் குறித்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட இருக்கின்றது.


அரசியலுக்காக சில பேர் பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் அதிக முறை முதல்வர் சுற்றுப்பயணம் செய்த மாவட்டம் கோவைதான். கோவை மக்களுக்கு அளவு கடந்த திட்டங்களை கொடுத்தவர் முதல்வர். சென்னைக்கு இணையாக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக கோவை இருக்கிறது. 234 தொகுதிகளையும் தனது தொகுதியாக நினைத்து முதல்வர் செயல்படுகின்றார். வரக்கூடிய காலத்தில் இன்னும் அதிக திட்டங்கள் கோவைக்கு வரும் என தெரிவித்தார்.


துணை முதல்வர், அமைச்சர்கள் ஆய்வு கூட்டங்கள் தொடர்ந்து நடந்தி கொண்டு இருக்கின்றனர்‌. பணிகள் தொய்வின்றி நடக்க அமைச்சர்கள் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். செய்தி வெளியிட வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி ஆய்வு கூட்டங்கள் குறித்து சொல்லி இருக்கின்றார். எந்த மாவட்டத்திலும் தொய்வில்லாமல் பணிகள் சென்றடைய அமைச்சர்கள் பணிபுரிந்து வருகின்றனர்” என தெரிவித்தார்.