இந்தியாவில் கொரோனாவின் கோரமான நிலை தணிந்தாலும் பல இடங்களில் வீரியம் அப்படியே இருக்கிறது. பிரிட்டனில் மூன்றாவது அலை துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் படிப்படியாக கொரோனா இரண்டாவது அலை குறைந்துள்ளது. கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்று அதிகமாகவே உள்ளது. கொரோனாவிற்கு பல்வேறு இடங்களில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் அதிகாரப்பூர்வமாக எந்த மருந்தும் முழுமையாக குணப்படுத்தும் என பரிந்துரைக்கப்படவில்லை. எனினும் அலோபதி, ஆயுர்வேதா, சித்தா என பல்வேறு மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம்  மூலக்கூறு கிராமத்தைச் சேர்ந்த பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவர் அனந்தையா என்பவர், கடந்த சில வாரங்களாகக் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆயுர்வேத முறையில் சில வகையான மருந்துகளைச் சொந்தமாகத் தயாரித்து விலையில்லாமல் வழங்கி வந்தார்.

 



 


இந்த தகவல் சில நாட்களுக்கு முன் தலைப்பு செய்திகளாக மாறியது. அவரின் மருந்து பலருக்கும் நல்ல பலன் அளிப்பதாகவும் தகவல் வெளியானது. இவர் செய்யும் பாரம்பரிய வைத்தியம் மூலம் கொரோனா மருந்துகளில் கண் மருந்துக்குத் தடை விதித்தும், கொரோனா லேகியத்துக்கு ஒப்புதல் அளித்தும்  ஆந்திர அரசு அனுமதி அளித்தது. மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆனந்தையாவின் மருந்திற்கு 2 நாளில் ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து ஆந்திரா அரசு அனுமதி அளித்துள்ளது.

 



 

ஆனால் மதுரையை சேர்ந்த சித்தமருத்துவர் சுப்ரமணியனின் இம்ப்ரோ மருந்திற்கு 1 ஆண்டுக்கு மேல் ஒப்புதல் வழங்காமல் உள்ளது. கொரோனா முதல் அலையின் போதே  சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை அளித்திருந்தார் அதில்...,"  66 மூலிகைகள் கொண்டு கசாய பொடி மருந்தைக் கண்டறிந்துள்ளேன். அவை கொரோனாவை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை. அந்த மருந்தை தண்ணீரில் கொதிக்கவைத்து, தினமும் இரண்டு வேளை சாப்பிடுவதற்கு முன்பு குடித்துவந்தால், கொரோனா நோயிலிருந்து விடுபடலாம். இதனால் எந்த பக்க விளைவும், தீங்கும் கிடையாது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே இம்ப்ரோ பொடி மருந்தை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அளித்தேன்.

 

இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. எனவே, கொரோனா நோயைக் குணப்படுத்தும் சித்த மருந்தான மூலிகைப் பொடியை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு விசாரித்த நீதிபதிகள் மருந்தை ஆய்வு செய்து  பரிந்துரைக்கக் கூறி மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் தற்போது வரை அதற்கான பரிந்துரையை ஆயுஷ் அமைச்சகம் வழங்கவில்லை. ஆனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள பாரம்பரிய மருத்துவரின் மருந்தை இரண்டே நாளில் ஒப்புதல் வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 



 

இது குறித்து சித்த மருத்துவர் சுப்ரமணியத்திடம் பேசினோம்," உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தற்கு பின் மாநில அரசுக்கும், ஆய்வு நிறுவனத்துக்கும் முழு விபரங்களை அனுப்பினோம். டிசம்பருக்கு பின் மருந்தினை அனுப்பி வையுங்கள் என்று தெரிவித்தனர். அதற்கு பின் எந்த தகவலும் இல்லை. ஆனால் ஆந்திராவில் பாரம்பரிய மருத்துவரின் மருந்து இரண்டே நாளில் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிறரின் மருந்தை பரிந்துரைப்பதில் தவறில்லை. ஆனால் தமிழரின் பாரம்பரிய மருந்துகள் புறக்கணிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. என்னுடைய மருந்தில் என்ன, என்ன சேர்க்கப்படுகிறது என்பது முதற்கொண்டு அனுப்பியுள்ளேன். ஆனால் விரைவாக அனுமதி கிடைக்கவில்லை. எனவே தமிழக அரசு இதனை கவனத்தில் எடுத்து செயல்படுத்தும் முயற்சியில் இறங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.