கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். 36 வயதான வேல்முருகன், அதே பகுதியைச் சேர்ந்த சத்யா என்கிற 27 வயது பெண்ணை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்துள்ளார். காதல் ஒரு கட்டத்தில் காமமாக மாறி, பலமுறை அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். ‛கண்டிப்பா உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்...’ என அவர் அளித்த வாக்குறுதியை நம்பி சத்யாவும் அவருக்கு இசைந்துள்ளார். 


இதற்கிடையில் கதையில் திடீர் திருப்பமாக சத்யா கர்ப்பமானார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வேல்முருகன், ‛இப்போதைக்கு குழந்தை வேண்டாம்... பிரச்சனை ஆகிடும்... கருவை கலைத்துவிடு...’ என்று சத்யாவிடம் கூறியுள்ளார் வேல்முருகன். ஆனால் சத்யா, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். யாருக்கும் தெரியாமல் வீட்டாரிடம் மறைத்து வந்த சத்யா, ஒரு கட்டத்தில் வயிறு பெரிதாக குடும்பத்தாரிடம் கூற வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. 




இப்போது எதுவும் செய்ய முடியாது என்பதால் குடும்பத்தாரும் அமைதி காத்தனர். இந்நிலையில் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சத்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது தான் அடுத்த ட்விஸ்ட் ஆரம்பித்தது. குழந்தைக்கான பதிவுக்கு தந்தை பெயர் கூறுமாறு மருத்துவமனை செவிலியர்கள் கேட்டுள்ளனர். அப்போது தான் தனக்கு திருமணம் ஆகவில்லை என்கிற தகவலையும், தனக்கு நடந்த சம்பவத்தையும் சத்யா கூறியுள்ளார். உடனே அது குறித்து ஊ.மங்கலம் போலீசாருக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 


இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சத்யாவின் விசாரணை செய்த பின், வேல்முருகனை வரச் செய்து அவரிடமும் விசாரணை நடத்தினர். தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட வேல்முருகன், சத்யாவை மணந்து கொள்வதாக தெரிவித்தார். இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல், அவரை அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் வேல்முருகன்-சத்யா ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. 




பெற்ற குழந்தையை முன்னால் வைத்து பெற்றோருக்கு நடந்த திருமணத்தை கிராம மக்கள் அனைவரும் திரண்டு வந்து பார்த்து வாழ்த்தினர். இப்படி ஒரு திருமணமா என வியந்தவர்களும் உண்டு. பிறக்கும் போதே பெற்றோர் சேர்த்து வைத்த குழந்தை என, அந்த குழந்தையை புகழ்ந்து வருவோரும் அதிகரித்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண