Virudhunagar Fire Accident: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.


பட்டாசு ஆலை வெடி விபத்து:


விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பகோட்டை அருகே சிவகாசியை சேர்ந்த விக்னேஷ் (45) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு தொழிற்சாலையில் 55 அறைகளில் 150க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 


இந்த நிலையில் இன்று பிற்பகல் திடீரென பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது  பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென வெடித்து சிதறியதில் 5-அறைகள் தரைமட்டமாகின.


இந்த வெடிவிபத்தில் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் உட்பட 10 பேர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்துள்ளனர். 4 ஆண்கள், 6 பெண்கள் என 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி மற்றும் கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  உயிரிழந்தவர்கள் ரமேஷ்  (26), கருப்பசாமி (29), அம்பிகா ( 30), முருகஜோதி (50), முத்து (45), சாந்தா ( 35), குருசாமி (50) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளது.   


பிரதமர் மோடி இரங்கல்:


இந்த நிலையில், விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், " விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் நடந்த விபத்து குறித்து அறிந்ததும் மிகுந்த வேதனையடைந்தேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்.






உதவித் தொகையாக  உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.


முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்:


இந்த விபத்து குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 10 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்த துயரநிகழ்வு பெரும் வருத்தத்தையும் மனவேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்ச ரூபாய், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.