விழுப்புரம் : செஞ்சி கோட்டைக்கு செல்லும் அரசியல் கட்சியினர் ஆட்சியையும், பதவி யையும் இழப்பார்கள் என்ற சென்டிமெண்ட் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.


செஞ்சி கோட்டைக்கு சென்று பதவியை இழந்த அரசியல்வாதிகள்


கடந்த 2005-ம் ஆண்டு அ.தி. மு.க., ஆட்சியில், செஞ்சி கோட்டையில் சுற்றுலா விழா நடத்தினார். விழா முடிந்து 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்தது. விழாவை முன்னின்று நடத்திய அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஏழுமலைக்கு மறுமுறை கட்சியில் சீட் வழங்கப்படவில்லை. அடுத்து தி.மு.க., ஆட்சியில் 2010ம் ஆண்டு சுற்றுலா விழாவை சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் நடத்தினர். இவர்களும் 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை இழந்தனர். சட்டமன்ற உறுப்பினர் கண்ணனுக்கும் மறுமுறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.


2012 ஆண்டு ஏப்ரல் மாதம் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த கோகுல இந்திரா செஞ்சி கோட்டைக்கு வந்து சென்றார். அடுத்த சில மாதங் களில் அவரும் அமைச்சர் பதவியை இழந்தார். இதன் பிறகு செஞ்சி கோட்டைக்கு சென்று வந்தால் பதவி பறிபோகும் என்ற பேச்சு அரசியல் கட்சியினர் மத்தியில் நிலவியது. இதனால் மீண்டும் அ.தி.மு.க ஆட்சியில் எந்த அரசு நிகழ்ச்சியும் செஞ்சி கோட்டையில் நடத்தவில்லை.


இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு செஞ்சி கோட்டையில் மரபு நடை விழா நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் மஸ்தான் பங்கேற்றார். விழா முடிந்த சில மாதங்களில் மரக்காணம் கள்ளச்சாராய சம்பவம் அவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. கடந்த 21ம் தேதி செஞ்சி கோட்டையில் நடந்த பாரம்பரிய விழாவில் பங்கேற்ற அமைச்சர் மஸ்தானின் பதவி அடுத்த 7 நாட்களில் பறிபோனது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அரசியல் கட்சி இடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சரவையில் மாற்றம் வருமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தி.மு.க. சொன்னதைத்தான் செய்வோம். சொல்வதைத்தான் செய்வோம். நிச்சயமாக, உறுதியாக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும்” என்று கூறி இருந்தார். இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார் என்றும், அதற்கு ஆளுநர் தரப்பில்  ஒப்புதல் அளித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக பதவி ஏற்றுகொண்டார். 


இதையடுத்து புதிய அமைச்சரவையில் மனோ தங்கராஜ். செஞ்சி மஸ்தான், K ராமசந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.


பதவியை பறிக்கும் தஞ்சை பெரிய கோவில் - செஞ்சி கோட்டை ?


தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த பிரசித்தி பெற்ற பெரிய சிவத்தலம். தஞ்சை பெரிய கோவிலுக்கும் தமிழக, இந்திய அரசியல் பிரபலங்களுக்கும் ஓர் நெருங்கிய தொடர்பு உள்ளது.


ஆனால், இது அவர்களை சற்று அச்சம் கொள்ள வைக்கும் தொடர்பாகும். பெரிய பதவியில் இருக்கும் இந்திய / தமிழக அரசியல் பிரபலங்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று திரும்பினால் அவர்களது பதவி அல்லது உயிருக்கு அபாயம் ஏற்படும் என்ற அச்சம் உள்ளது.


தஞ்சை பெரிய கோவில் உள்ளே புதிதாக வராஹி அம்மன் சிலை வைக்க பிரச்சனை எழும்பி, பிறகு அந்த புதிய மண்டபம் இடித்த அதே நாளான ஜனவரி 31 1976-ம் ஆண்டு தான் கலைஞர் கருணாநிதி அவர்களின் தலைமையிலான தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அந்த வராஹி அம்மன் மண்டபத்தை இடிக்க உத்தரவிட்ட அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியின் பதவியும், ஆட்சியையும் அதன் பிறகு பறிபோனது.


எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கும் போது ராஜ ராஜ சோழனின் ஆயிரமாவது முடிசூட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவிற்கு சென்ற போது அங்கே சற்று மயக்கம் அடைந்தார் எம்ஜிஆர்., அதன் பிறகு தான் எம்.ஜி.ஆர் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது.


இந்த அபசகுனத்தை உடைக்கிறேன் என்று சபதம் எடுத்து மீண்டும் ஆட்சியில் இருந்த கலைஞர்கருணாநிதி அவர்களின் தி.மு.க அரசு தஞ்சை பெரிய கோவிலும் 1000 ஆண்டு விழாவை ஏற்பாடு செய்தது. இந்த விழாவிற்கு சென்று வந்த பிறகு பல தி.மு.க பிரபலங்கள் பதவி இழந்து, பல இன்னல்களை சந்தித்தனர். மத்திய அமைச்சராக இருந்த ராசா பதவி இழந்ததோடு, ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்கும் சென்றார்.


தொடர்ந்து கனிமொழியும் சிறைக்கு சென்றார். வரலாறு காணாத வண்ணம், தி.மு.க மீண்டும் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. இதன் பிறகு அரசியல் பிரபலங்களுக்கு மத்தியில் மேலும், தஞ்சை பெரிய கோவில் மீதான அச்சம் அதிகமானது. அது இன்றளவும் நீடித்து வருகிறது, தஞ்சை பெரிய கோவிலை போல் தான் செஞ்சி கோட்டையும் அமைந்துள்ளது என பேசப்பட்டு வருகிறது.