சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், 2023- 2024 ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பில் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள தரவரிசை பட்டியல், 7.5% அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள தரவரிசை பட்டியல், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள தரவரிசை பட்டியல் என மூன்று தரவரிசை பட்டியல்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார்.


அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,


தரவரிசை பட்டியலில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கிருத்திகா 596 மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பதாக தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம் மங்கரை அரசு பள்ளி மாணவன் பச்சையப்பன் 565 மதிப்பெண்களுடன் 2-ம் இடமும், காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவன் முருகன் 560 மதிப்பெண்களுடன் 3வது இடமும் பிடித்துள்ளனர். பொதுகலந்தாய்வில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் 720 மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். சென்னையை சேர்ந்த சூர்யா சித்தார்த், சேலத்தை சேர்ந்த வருண் ஆகியோர் தலா 715 மதிப்பெண்களுடன் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். மேலும், அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் தமிழ்நாடு மாணவ, மாணவிகள் 5 பேர் இடம்பிடித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


2023-2024 ஆம் கல்வி ஆண்டின் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக 40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 3042 விண்ணப்பங்களும், விளையாட்டு பிரிவிற்கு 179 விண்ணப்பங்களும், முன்னாள் படை வீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 420 விண்ணப்பங்களும், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டது. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 6326, பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த பிடிஎஸ் இடங்கள் 1768.அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 606 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 20ம் தேதி அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கவுன்சிலிங் தொடங்கினால், தமிழ்நாட்டில் 25ம் தேதி கவுன்சிலிங் தொடங்கும். இதுவரை மத்திய அரசின் சார்பில் மருத்துவ கலந்தாய்விற்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கவில்லை. இணையதளத்தில் தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவை மாறுதலுக்கு உட்பட்டவையாக இருப்பதால் தேதியை உறுதியிட்டு சொல்ல முடியவில்லை என கூறினார்.


பொதுகலந்தாய்வில் மூன்றாவது இடத்தை பிடித்த பிரபஞ்சன்:


7.5% சதவீதம் இட ஒதுக்கீட்டில் இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் 606 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 2021 22 ஆம் ஆண்டு 555 இடங்கள், 20223 ஆம் ஆண்டு 584 இடங்கள் இந்த ஆண்டு 606 இடங்களாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், 7.5% உட்பட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கலைஞர் நூற்றாண்டு மருத்துவ மனையில் நடைபெறும் எனவும், பொது கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறும் என்றார். மேலும், ஓமந்தூரார் மருத்துவமனையை மாற்ற திட்டம் இல்லை என்றார்.


நீட் நுழைவு தேர்வு


நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு மே மாதம் 7ம் தேதி நடைபெற்றது. 499 நகரங்களில் நடைபெற்ற இத்தேர்வில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த தேர்வில் பலகட்ட சோதனைக்கு பின் தேர்வு அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நீட் நுழைவு தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமைவெளியிட்டது.


இந்த தேர்வில் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள மேல்மலையனூர் கிராமத்தை சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவன் 99.9% மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் ஜெகதீஷ், நெகனூர் அரசு மேல் நிலைப் பள்ளி கணித ஆசிரியை மாலா, இவர்களின் மகன் தான் பிரபஞ்சன். இவர் பத்தாம் வகுப்பு வரை செஞ்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் படித்து மருத்து நுழைவுத்தேர்வை எதிர்கொண்டார். இந்த நிலையில் ஜூன் 13 அன்று வெளிவந்த NEET தேர்வு முடிவில் 720/720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார்.