Toll Fee Hike: அமலுக்கு வந்தது சுங்கக்கட்டண உயர்வு; எவ்வளவு உயர்ந்தது?
இரண்டு சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் ஐந்து ரூபாய் முதல் 60 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
Continues below advertisement

சுங்கச்சாவடி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு சுங்கச்சாவடியில் மட்டும் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
சுங்ககட்டணம் உயர்வு
தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. இதன் மூலம் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. சுங்கச்சாவடிகளையும் அந்த அமைச்சகமே நெடுஞ்சாலைகள் ஆணையங்கள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்து வருகிறது.
இந்தியா முழுவதும் 4 வழிச்சாலை, 6 வழிச்சாலை, 8 வழிச்சாலை என புதிய சாலைகள் போடப்பட்டுள்ளது. இப்படி போடப்பட்ட ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூர தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 381 கிலோ மீட்டர் தூரம் நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் புதிதாக மேலும் 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் தற்போது 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், விழுப்புரம், திருவண்ணாமலை சாலையில் தென்னமாதேவி பகுதியில் இயங்கி வரும் சுங்கச்சாவடி மற்றும் திண்டிவனம் செஞ்சி சாலையில் நங்கிலிக்கொண்டான் பகுதியில் இயங்கி வரும் சுங்கச்சாவடி என இரண்டு சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் ஐந்து ரூபாய் முதல் 60 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஜார், ஜீப், வேன் ஒருமுறை பயணிக்க 35 ரூபாய், இருமுறை பயணிக்க 55 ரூபாய், பாதாந்திர கட்டணமாக 1200 ரூபாய் வசூல் செய்யப்படவுள்ளது. இலகுரக வாகனங்கள் ஒருமுறை செல்ல 60 ரூபாயும், இருமுறை செல்ல 85 ரூபாயும், மாதாந்திர கட்டணமாக 1940 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
டிரக் மற்றும் பேருந்துகளுக்கு ஒருமுறை செல்ல 120 ரூபாயும், இருமுறை செல்ல 185 ரூபாயும், மாதாந்திர கட்டணமாக 4060 ரூபாயும் வசூலிக்கப்படவுள்ளது. மூன்று அச்சில்க்கொண்ட வாகனங்கள் ஒருமுறை செல்ல 135 ரூபாயும், இருமுறை செல்ல 200 ரூபாயும், மாதாந்திர கட்டணமாக 4430 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
பல அச்சுகள் உள்ள வாகனங்கள் ஒருமுறை செல்ல 235 ரூபாயும், இருமுறை செல்ல 350 ரூபாயும், மாதாந்திர கட்டணமாக 7755 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது.
சுங்கச்சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இந்நிலையில் மார்ச் 31 இன்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதன்படி தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. அந்த வகையில், அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையை அடுத்த பரனூர் சுங்கச்சாவடி, திண்டிவனம்-ஆத்தூர், நெல்லூர், நாங்குநேரி, சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள பெரும்புதூர், பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி, பள்ளிக்கொண்டா, புதுக்கோட்டை-வாகைகுளம், எஸ்விபுரம், சாலைபுதூர், செண்பகம்பேட்டை, வானகரம், சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, வாணியம்பாடி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.