விழுப்புரம்: பாலியல் தாக்குதலில் ஈடுபட்டவருக்கு ஒரு ஆண்டு முழுவதும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்று கிழமைகளில் சமூக சேவை செய்ய விழுப்புரம் சிறார் நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 


பாலியல் தாக்குதல் வழக்கு 


விழுப்புரம் அருகே உள்ள கெடார் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் அஜித்,( வயது 24). இவர், கடந்த 2016ம் ஆண்டு, 14 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளார். பின்னர், சிறுமியை அவரது வீட்டில் விட்டுள்ளார்.


இதுகுறித்த புகாரின் பேரில் அஜித்தை கைது செய்த கெடார் போலீசார், அவர் மீது விழுப்புரம் இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் கடத்தல் மற்றும் போக்சோ பிரிவில் வழக்கு தொடர்ந்தனர்.


அதிரடி தீர்ப்பு வழங்கிய சிறார் நீதிமன்றம் 


இவ்வழக்கு தொடர்பான விசாரனை சிறார் குற்றங்களை விசாரிக்கும் விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இவ்வழக்கில் சட்சியங்களிடம் விசாரனை முடிந்த நிலையில் நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கினார். குற்றஞ்சாட்டபட்ட அஜீத் ஒரு வருடத்திற்கு ஞாயிற்றுகிழமைகள் முழுவதும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சமூக சேவை செய்ய வேண்டுமென நீதிபதி ராதிகா உத்தரவிட்டுள்ளார்.