விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநலச் சங்கத்தின் மாநில தலைவராக உள்ளார். இவரின் உறவினர் நேசம் என்பவர் 28.11.2021ம் தேதி இறந்துவிட்டார். இவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்காக முதியோர்களுக்கு அன்னதானம் 25 நபர்களுக்கு வழங்க வழங்க முடிவு செய்து 27.11.2022ம் தேதி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் இயங்கும் உணவகம் ஒன்றுக்கு சென்றார். அங்கு பார்சல் சாப்பாடு ரூ.80/- என்றும் கூறி, கொட்டேஷன் ரசீது கொடுத்துள்ளனர்.


அந்த கொட்டேஷனில் ஒரு பார்சல் சாப்பாட்டில் சாதம், சாம்பார், காரகுழம்பு, ரசம், மோர், கூட்டு, பொறியல், அப்பளம், வாழை இலை, கவர் மற்றும் ரூ 1 க்கு ஊறுகாய் பொட்டலம் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்து 25 சாப்பாட்டுக்கும் ரூ.80/- வீதம் 2000 ரூபாய் பணம் பெற்றுகொண்டனர்.


கொட்டேஷன் ரசீதில் கையெழுத்து போட்டு கடை உரிமையாளர் கொடுத்து உள்ளார். மறு நாள் 28.11.2022ம் தேதி 25 பார்சல் சாப்பாட்டு பொட்டலங்களை கொடுத்து உள்ளார். மேலும் விற்பனை ரசீது கேட்டபோது, ஹோட்டல் பெயரிட்ட ரசீது ஒன்றை எழுதி கொடுத்துளனர். சாப்பாட்டு பொட்டலங்களை பிரித்து சாப்பிடும் போது ஊறுகாய் இல்லாதது தெரியவந்தது.


இது குறித்து ஆரோக்கியசாமி ஹோட்டல் உரிமையாளரிடம் சென்று கேட்டு உள்ளார். அதற்கு ஊறுகாய்க்கு உரிய தொகையை தர மறுத்துவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆரோக்கியசாமி இது குறித்து விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் சதீஷ்குமார் தீர்ப்பு கூறினார்.


தீர்ப்பில் ஆரோக்கியசாமி வாங்கிய பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காதது சேவை குறைபாடு ஆகும். இதனால் ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.30,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.5,000 மற்றும் ஊறுகாய் பொட்டலம் 25-க்குரிய தொகை ரூ.25/-ம் தொகைக்குரிய ஒரிஜினல் ரசீதும் தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் அபராத தொகையாக செலுத்த வேண்டும். தவறினால் மாதம் ஒன்றுக்கு 9 சதவிகிதம் வட்டியுடன் பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.