நூறாண்டுகள் பெருமைமிக்க பத்திரிகை குழுமமான விகடன் பத்திரிகையின் இணையதளத்தை நேயர்கள் பார்க்க முடியாததாலும் அதன் மூலம் செய்தியை தெரிந்துக்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளதாலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி பல்வேறு தரப்பினர் மத்தியில் எழுந்துள்ளது.

விகடன் மீது ஆண்டாண்டாய் தொடரும் வழக்குகள்

ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டும் முக்கிய பத்திரிகையாக விகடன் பல்லாண்டுகளாக இருந்து வரும் நிலையில், விகடன் மீது பல்வேறு தரப்பினரும் ஏகப்பட்ட வழக்குகளை தொடுப்பதும் அதனை நீதிமன்றம் மூலம் விகடன் குழுமம் தகர்ப்பதும் பத்திரிகைத்துறை அறிந்த ஒன்று. இருப்பினும், இதுவரை இல்லாத அளவில், விகடன் குழுமத்தின் இணையப்பக்கம் மொத்தமாக பார்க்க முடியாத அளவிற்கு சென்றுள்ளதால், பல்வேறு தரப்பினரும் விகடன் இணையப்பக்கத்திற்கு என்ன ஆயிற்று என்ற கேள்விகளையும் சந்தேகங்களையும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

பிரதமர் மோடி கார்டூன் காரணமா ?

இந்நிலையில், பிரதமர் மோடி குறித்து ஒரு கார்டூடை விகடன் முழுமம் வெளியிட்டிருந்தது. அந்த கார்டூன் பிரதமர் மோடியை அவமரியாதை செய்யும் விதமாக இருப்பதாகவும், இந்திய ஜனநாயகத்தின் தலைவராக இருக்கும் பிரதமர் பதவியை கேலி கூத்தாக்கும் வகையிலும் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு வரையப்பட்டிருப்பதாக பாஜகவினர் பொங்கி எழுந்தனர். இன்னும் ஒருபடி மேலே சென்று, பாஜக மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலை, மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு கடிதமே எழுதியுள்ளார். அதில், விகடன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

விகடன் இணையதளத்தை பார்க்க முடியவில்லை என புகார்

இந்நிலையில், விகடனின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பலராலும் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் உள்ள நபர்கள் மட்டுமே இணையதளத்திற்குள் சென்று செய்திகளை படிக்க முடியும் நிலையில், பல பகுதிகளில் உள்ள நேயர்களால், மக்களால் இணையதளத்தை இயக்க முடியவில்லை என்ற புகார் எழுந்து வந்தது.

அண்ணாமலை புகாரில் நடவடிக்கையா ?

பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பும் வகையில் விகடன் குழுமம் கார்டூன் வெளியிட்டது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அளித்த புகாரின் அடிப்படையில் இணையதளம் முடக்கப்பட்டதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால், அதிகாராப்பூர்வமாக விகடன் இணையதளத்தை மத்திய அரசு முடக்கியதாக எந்த அறிவிப்பையும் செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிடவில்லை. இதனால், விகடன் இணையதளத்திற்கு உண்மையிலேயே என்ன ஆயிற்று, எதன் காரணமாக இணையதளம் இயங்கவில்லை என்று சந்தேகம் தொடர்ந்து எழுந்து வருகிறது.

எல்.முருகனை தொடர்புகொண்ட ’ABP நாடு’

இந்நிலையில், விகடன் இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளதாக கூறப்படுவது உண்மைதானா ? என்று அறிய ’ABP நாடு’ செய்தி நிறுவனம் சார்பில் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சரும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான எல்.முருகனை தொடர்புகொள்ள முயற்சித்தப்போது, ‘அவர் விமான பயணத்தில் இருப்பதாக கூறி, அந்த தொலைபேசியை அவரது உதவியாளர் ரிஷி என்பவர் எடுத்து, விகடன் இணையதளம் தொடர்பாக புகார் வந்ததால், அதனை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிவரும் செய்தி உண்மைதான்’ என்று நம்மிடையே தெரிவித்தார். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கை போன்று எதுவும் மத்திய அரசு சார்பிலோ அல்லது அமைச்சர் எல்.முருகன் தரப்பில் இருந்தோ வெளியிடப்படவில்லை.

விகடன் குழுமம் பரபரப்பு அறிக்கை

இந்த விவகாரம் தொடர்பாக விகடன் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை.

முன்னதாக விகடன் இணைய இதழான `விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. இது பாஜக ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, பாஜக மாநில தலைவரான அண்ணாமலையால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பபட்டது.

இந்த நிலையில் பல இடங்களில் விகடன் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என்று வாசகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அரசு தரப்பில் இதுவரை விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் வரவில்லை.

நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம்.. ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துகொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.