உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


சில நாட்களுக்கு முன்  உடல்நிலை சரியில்லாமல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக தேமுதிக கட்சி தலைமை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வழக்கமான சிகிச்சை என்றும், ஓரிரு நாளில் விஜயகாந்த வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்தின் வலது காலில் ரத்த ஓட்டம் இல்லாமல், அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டதாக தேமுதிக சார்பில் இன்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது.


அந்த அறிக்கையில், நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து கேப்டனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும் கேப்டன் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. 






இதனைக் கேட்டு ரசிகர்களும், கழக தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர். விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்ததோடு, பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், எனது அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன்” என தெரிவித்திருந்தார். 






இந்நிலையில் விஜயகாந்தின் திரையுலக நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த் அவர் விரைவில் உடல் நல பாதிப்பிலிருந்து மீண்டு வர வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.