தேமுதிக தலைவர் விஜயகாந்த உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தேமுதிக தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இது தொடர்பான அறிக்கையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. 




தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே கடந்த நவம்பர் 18 ஆம் தேதி லேசான காய்ச்சல், சளி மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்த் சென்னை போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டதட்ட 23 நாட்கள் சிகிச்சைக்குப் பின் அவர் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டது. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கேபடன் உடன் இணைந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார், அதேபோல் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் அவரது உடல்நிலை சீராக உள்ளது தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவிததார். மேலும், மருத்துவமனை அறிக்கையும் வெளியிடப்பட்டது. 


இதனை தொடர்ந்து டிசம்பர் 14 ஆம் தேதி தேமுதிக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சக்கர நார்காலியில் வந்தார். அவரது இந்த நிலையை கண்டு ஏராளமான தொண்டர்கள் பொதுக்குழுவிலேயே கண்ணீர் விட்டு அழுதனர். அவர் கைகளை கூட அசைக்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு இருந்தார். அந்த பொதுக்குழு கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 




இந்நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவர் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் அவருக்கு நுரையீரல் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இன்று காலை தேமுதிக தரப்பில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. காலை 9 மணி அளவில் மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் விஜயகாந்திற்கு நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் மருத்துவர்களின் தொடர் முயற்சி இருந்த போதிலும் இன்று காலை சிகிச்சை பல்னின்றி உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.