விஜயகாந்த் எங்களின் உயிர் நண்பர். நரிக்குறவர் மக்கள் உயிராக நேசித்தோம். அவரது இறப்பு எங்களை மனமுடைய வைத்துள்ளது.  மக்களுக்கு சேவை செய்த தலைவர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று விஜயகாந்தின் பெயரும் வளர்ந்து நிற்கும் என ராமநாதபுரம் எம்.ஜி.ஆர் நகர் நரிக்குறவர் மக்கள் கண்ணீருடன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை தீவுத் திடலில் இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

மேலும், விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் அங்கிருந்து பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகத்தை அடைந்து, மாலை 4:45 மணியளவில் கட்சி தலைமை அலுவலகத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், அவரது மறைவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது உருவப் படத்துக்கு அந்தக் கட்சியினா், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மலா் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனா்.

 

இந்த நிலையில், ராமநாதபுரம் எம்ஜிஆர் நகரில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் இன்று விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி வணங்கி, ஒவ்வொருவராக வரிசையில் நின்று அமைதியாக மௌன அஞ்சலி செலுத்தினர்.

 

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு நாங்கள் மிகவும் நேசித்தவர். எங்களில் ஒருவராக அவரை பார்த்தோம். அவர் மீது அளவு கடந்த அன்பு கொண்டு உள்ளோம். அவரது மறைவு எங்களுக்கு தாங்க முடியாத ஒரு இழப்பு என துக்கம் தொண்டையை அடைக்க அஞ்சலி செலுத்தினார்கள்.