பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீர் வெளியேறும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
மழையால் மக்கள் பாதிப்பு
வடதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. டித்வா புயலின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேங்கி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக வடசென்னையில் சில பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. நேற்று இரவு முதல் அதிகாலை தொடர்ந்து பெய்த மழையால் சென்னை புறநகரில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதனை உடனடியாக வெளியேற்ற வேண்டு அந்தப் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசுக்கு விஜய் வலியுறுத்தல்
இந்த நிலையில், குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள வெள்ள நீரை அகற்ற கோரி தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன். மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை. மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது. மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.