மதுரையில் நடைபெற இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு, ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார் கட்சியின் தலைவர் விஜய். அது குறித்த அறிக்கையில், மாநாடு முன்கூட்டியே நடைபெறுவதற்கான காரணத்தை அவர் விளக்கியுள்ளார்.
விஜய் வெளியிட்ட அறிக்கை என்ன.?
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வீறுகொண்டு வெற்றிநடை போட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். இந்த பயணத்தின் அடுத்த கட்டமாக, கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்ட் 25-ம் தேதி மதுரையில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தேன்“ என கூறியுள்ளார்.
ஆனால், மாநாடு முடிந்த ஒருநாள் இடைவெளியில் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால், காவல் துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு, அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டியிருக்கிறது என்றும், எனவே மாநாட்டிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக, 18.08.2025 முதல் 22.08.2025 வரை ஏதேனும் ஒரு தேதியில் மாநாட்டை நடத்தும்படியும் காவல் துறை கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும், அதன்பேரில், கழகத்தின் மாநில மாநாடு முன்கூட்டியே நடத்தப்பட உள்ளதாகவும் விஜய் கூறியுள்ளார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்ட் 21-ம் தேதி(21.08.2025) வியாழக்கிழமை அன்று, மாலை 4.00 மணி அளவில் ஏற்கனவே அறிவித்த அதே மதுரை மாநகரில், அதே பிரம்மாண்டத்தோடும், கூடுதல் உற்சாகத்தோடும் நபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் எனவும் தனது அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.
இதற்கான பணிகள், ஏற்கனவே சிறப்பான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகள் தற்போது மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே, கழகத் தோழர்கள், வரும் 21-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள கழகத்தின் மாநில மாநாட்டிற்கு மிகவும் பொறுப்புடனும், பாதுகாப்புடனும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என தனது அறிக்கை மூலம் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநாடு குறித்து காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ன.?
தமிழக வெற்றிக் கழகம் மதுரையில் நடைத்தும் மாநாட்டிற்காக, 530 ஏக்கர் நிலங்கள் வாடகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளதாகவும், அதில் 300 ஏக்கரில் மாநாடு நடைபெறும் இடமாகவும், மீதமுள்ள நிலம் பார்க்கிங் வசதிக்காக பயன்படுத்தப்பட உள்ளது எனவும் காவல்துறையிடம் ஏற்கனவே தவெக தெரிவித்துள்ளது. மேலும், இந்த 2-வது மாநில மாநாட்டிற்கு, தவெகவினர் மட்டும் ஒன்றரை லட்சத்திற்கும் மேல் வருவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதனால் தான், பாதுகாப்பிற்காக அதிக காவல்துறையினர் ஒதுக்கப்பட வேண்டும் என்ற காரணத்தால், மாநாட்டு தேதியை மாற்றுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டது. அதைத் தொடர்ந்து தான் தற்போது மாநாடு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.