தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் முடிந்துள்ள நிலையில், விஜய் அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. யாரை எதிர்க்க போகிறார்? யாருடன் நட்பு போராட்ட போகிறார்? யாருடன் கூட்டணி சேர போகிறார் என பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது.


திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா விசிக?


இப்படிப்பட்ட சூழலில், ஒட்டுமொத்த கவனத்தையும் ஒரு அறிவிப்பின் மூலம் தன் பக்கம் திருப்பியுள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. வரும் அக்டோபர் 2ஆம் தேதி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் அறிவித்துள்ளார்.


தமிழ்நாடு அரசியல் களத்தில் நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் மது ஒழிப்பை திருமாவளவன் கையில் எடுத்துள்ளார். இதில், கவனிக்க வேண்டயது என்னவென்றால், திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, மாநாட்டில் பங்கேற்குமாறு அதிமுகவுக்கும் அழைப்பு விடுத்திருப்பதுதான். 


திமுக கூட்டணியில் இருந்து விலக திருமாவளவள் தயாராகி விட்டார் என்றெல்லாம் அரசியல் களத்தில் பேசப்படுகிறது. இருப்பினும், பாஜக, பாமகவுக்கு விசிக அழைப்பு விடுக்காமல் தவிர்த்திருப்பது திமுக கூட்டணியில் அக்கட்சி தொடர்வதற்கான சமிக்ஞையே என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.


திருமாவளவன் அளித்த பதில்:


இந்த நிலையில், மது ஒழிப்பு மாநாடு குறித்து திருமாவளவனே விளக்கம் அளித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து விசிக எப்போதுமே பேசவில்லை என அவர் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் தான் இப்போதும் விசிக இருக்கிறது என்றும் கூட்டணி தொடரும் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.


அத்துடன் மது ஒழிப்பு மாநாட்டை தேர்தலுடன் தொடர்புபடுத்தக்கூடாது என கேட்டுக்கொண்ட அவர், தேர்தல் கூட்டணிக்காக மாநாட்டை நடத்தினால் அதைவிட அசிங்கம் தனக்கு கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். 


முன்னதாக, மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு விசிக அழைப்பு விடுத்தது குறித்து பேசிய திமுக மூத்த தலைவரும் அமைச்சருமான மா. சுப்ரமணியன், "அதிமுக பங்கேற்பது நல்லது தான். நல்ல விஷயத்திற்கு சேர்ந்தால் நல்லது தான். அரசும் மது ஒழிப்பிற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.


விடுதலை சிறுத்தைகள் அழைத்து அதிமுக சென்றால் நல்லது தானே , நல்ல விஷயத்திற்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம் தானே , மதுவிலக்கு விஷயங்களில் அரசே விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது" என்றார்.