வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் சிறுவாபுரியில் பொதுமக்களால் சிறை வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





ஐசரி கணேஷ்


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருத்தலமான சிறுவாபுரி முருகன் கோயிலிலில் செவ்வாய் கிழமை அன்று மூலவரான பாலசுப்பிரமணியசுவாமிக்கு பால் அபிஷேசம் செய்தால், நினைத்த காரியம் நடக்கும், தடைகள் விலகும் என்பது ஐதீகம். அதனடிப்படையில் கடந்த 8 வாரங்களாக ஒவ்வொரு செவ்வாய் கிழமையின்போது சட்டத்திற்கு புறம்பாக கோயிலின் தக்கர் EO நாராயணன் மூலமாக கோயிலை திறந்து, ஐசரி கணேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் பூஜை செய்துள்ளனர். இது குறித்து ஒவ்வொரு முறையும் கிராம மக்கள் EO-விடம் முறையிட்டும், அதனை கண்டுக்கொள்ளாமல் ஐசரி கணேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மட்டும் வழிபட கோயிலை திறந்துவிட்டிருக்கிறார்.



சிறுவாபுரி முருகன் கோயில்


அதேபோல், செவ்வாய்க்கிழமையான இன்றும் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு வழிபட வந்த ஐசரி கணேசுக்காக மட்டும் ஊரடங்கு விதிகளை மீறி கோயிலை திறந்துவிட்டு, அர்ச்சகர்களை வரவழைத்து பூஜைகள் நடத்தியுள்ளார் EO நாராயணன். இதனை கண்ட ஊர் பொதுமக்கள் ஐசரி கணேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கோயிலுனுள் வைத்து பூட்டி, கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிறை வைத்துள்ளனர்.



கோயிலில் சிறை வைக்கப்பட்ட ஐசரி கணேஷ்


பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டு ஐசரி கணேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை ஊர் மக்கள் விடுவித்துள்ளர். பிரபல பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும், செல்வந்தராகவும் இருக்கும் ஐசரி கணேஷ், சிறுவாபுரியில் சிறைவைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐசரி கணேஷ் போன்ற பணம் படைத்த ஆட்களுக்கு மட்டும் கோயில்களை திறந்து உதவும் கோயில் செயல் அலுவலர் நாராயணன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், அவர் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவிடவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுபோன்று இனி இங்கு நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய காவல்துறையினரும் கண்காணிக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


இந்த கோயிலில் மூலவர் முருகனைத் தவர பிற அனைத்து தெய்வங்களும் மரத்தால் செய்யப்பட்டவை,  தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, நவராத்திரி உள்ளிட்ட நாட்களில் நடைபெறும் திருவிழாக்கள் பெயர் பெற்றவரை. திருவண்ணாமலை சிவனை நினைத்தாலே முக்தி என்பதுபோல், இந்த கோயில் மூலவரான பாலசுப்பிரமணியசுவாமியை நேரில் தரிசிக்காமல் வீட்டில் இருந்தபடியே நினைத்தால் போது, கேட்டதை கொடுப்பார் என்பதும், புதிய வீடு கட்ட விரும்புபவர்கள் இங்கு வந்து வழிப்பட்டால் எந்த தடையும் இன்றி, கட்டுமானம் நடைபெறும் என்பதும் நம்பிக்கை.