vanniyar sangam manadu 2025 : 12 ஆண்டுகள் கழித்து மாநாடு நடைபெற உள்ள நிலையில், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிக்கு அன்புமணி ராமதாஸ் ஏற்பாடு செய்துள்ளார்
வன்னியர் சங்க மாநாடு - Vanniyar Sangam Manadu
வன்னியர் சங்கம் தான் பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்தது. தொடர்ந்து வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் 12 ஆண்டுகளாக இந்த மாநாடு, நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வருட சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு, இந்த ஆண்டு நடைபெறும் என அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். முதல்முறையாக வன்னியர் சங்க மாநாடு அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.
பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட மாநாடு திடல்
100 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் மாநாடு நடைபெறும் பகுதியில் இருந்து 20 கி.மீ. தூரத்திற்கு மாமல்லபுரம் வரை அக்னி கலசம் பொறித்த வன்னியர் சங்க கொடிகளால் கிழக்கு கடற்கரை சாலை களைகட்டி உள்ளது.
அதன் மூலம் எச்.டி. தரத்தில் மாநாட்டு நிகழ்ச்சிகளை இருக்கையில் அமர்ந்த நிலையில் தொண்டர்கள் கண்டுகளிக்க எல்இடி திரை வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு முகப்பு பகுதியில் வன்னியர்களின் அடையாள சின்னமான பிரம்மாண்டமாக 25 அடி உயரத்தில் அக்னி கலசம் வைக்கப்பட்டு உள்ளது. ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் படத்துடன் பிரம்மாண்டமான முகப்பு தோரண வாயில் அமைக்கப்பட்டு உள்ளது.
அடிப்படை வசதிகள்
குறிப்பாக மாநாட்டு நிகழ்ச்சிகளை தொண்டர்கள் அமர்ந்து பார்க்க 2.5 லட்சம் இருக்கைகள், தரைவிரிப்புகள், போடப்பட்டு உள்ளன. மாநாட்டிற்கு வரும் பெண்களின் வசதிக்காக 500 மொபைல் டாய்லெட் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. குடிநீர் வசதிக்காக 10 லட்சம் குடிநீர் பாட்டில்கள் தொண்டர்கள் மூலம் வழங்கப்பட உள்ளன. மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்தும் வகையில் இ.சி.ஆர். சாலையில் பக்கிங்காம் காலவாய் ஒட்டி 10 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் வகையில் 5 இடங்களில் விசாலமான பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
உணவு வழங்க நடவடிக்கை
கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மாமலலபுரம் முதல் திருக்கழுக்குன்றமத் வரையில் உள்ள வன்னிய கிராம பகுதிகளில் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு ஆங்காங்கே உணவு பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளன. மாநாட்டு வாகனங்கள் பஞ்சரானால், பஞ்சர் ஒட்ட நடமாடும் பஞ்சர் வாகனங்கள் வசதி செய்யப்பட்டு உள்ளது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
கிழக்கு கடற்கரை சாலையில் முழுவதும் மாநாட்டு பாதுகாப்பிற்காக 5000 ஆயிரம் போலீசார், அதிரடிப்படை போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் திருவிடந்தை கடலில் இறங்காத வகையில் கடலோர காவலர் படை மற்றும் போலீசார் அங்கு பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வாகனங்களை ஒழுங்குபடுத்த வன்னியர் சங்கம் சார்பில் 2000 அக்னி படை வீரர்கள் கருப்பு சீருடையுடன் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் போலீசாருடன் இணைந்து இப்பணியில் ஈடுபடுவார்கள்.
மாநாடு எப்போது தொடங்கும் ?
வன்னியர் சங்க மாநாடு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக ஆடல், பாடவல்களுடன் கலை நிகழ்ச்சிகள், வன்னிய புராண நாடகம் நடைபெறுகிறது. பிறகு மாலை 6 மணி முதல் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். 8 மணி அளவில் அன்புமணி ராமதாஸ் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1500 டிரோன்கள் மூலம் ஷோ
விண்ணில் 1500 டிரோன்கள் ஒரே நேரத்தில் பறக்கவிட்டு ட்ரோன் ஷோ காட்டப்பட உள்ளது. குறிப்பாக இந்த ட்ரோன் ஷோவில் வன்னியர் இட ஒதுக்கீடு போராளிகள், துரோபதி, காடுவெட்டி குரு, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகிய புகைப்படங்கள் வானில் ட்ரோன் மூலம் ஒலி, ஒளி கண்காட்சி நடக்கிறது. இதற்காக மாநாட்டு பந்தல் அருகில் 10 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு ஒரே நேரத்தில் 1500 டிரோன்கள் விண்ணில் பறக்கவிடப்பட உள்ளன.
இதேபோன்று ராமதாஸின் கடந்து வந்த பாதை குறித்து, சிறப்பு டாக்குமென்ட்ரி வெளியிடப்பட உள்ளது. இதில் ராமதாஸ் ஆரம்ப காலகட்டம் முதல் இப்போது வரை எப்படி, வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை கட்டமைத்தார் என்பது குறித்த தகவல்கள் இடம் பெற உள்ளது.
கோரிக்கைகள் என்னென்ன ?
தமிழக அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துதல், 69 சதவித இட ஒதுக்கீட்டை பாதுகாத்தல், வன்னியர் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப அனைத்து சமூகத்தினருக்கும் போதிய இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. சித்திரை முழு நிலவு மாநாட்டை ஒட்டி கிழக்கு கடற்கரையில் சாலையில் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு, பழைய மாமல்லபுரம் சாலை வழியாக பொது போக்குவத்து வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.