கோவை சித்தாபுதூர் அருகே வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட தலைமை  அலுவலகத்தில், அக்கட்சியின் சார்பில் ஆடிட்டர் ரமேஷின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், மாவட்டத் தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது ஆடிட்டர் ரமேஷின் உருவப் படத்திற்க்கு மலர் தூவி, மௌன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் வானதி சீனிவாசன்செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”ஆடிட்டர் ரமேஷ் கொலை குறித்து சிபிசிஐடி விசாரணையின் இறுதி தீர்ப்பு கிடைக்கவில்லை. அவரது படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. நூற்றுக்கணக்கான தொண்டர்களை பலி கொடுக்கும் இயக்கமாக பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளது. தமிழகத்தில் வேறு எந்த கட்சிக்கும் இந்த சூழல் கிடையாது. ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் நீதி கிடைப்பதில் இருக்கும் தாமதம், பல குற்றவாளிகளை உருவாக்கும். விரைவாக விசாரணை முடித்து நியாயம் வழங்க வேண்டும்.

தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசிகள், தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதற்கான ஆதாரங்களை பாஜகவினர் திரட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளை மாநில அரசு விரைந்து மக்களுக்கு செலுத்த வேண்டும். கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கட்டுமான பணிகளுக்காக கோயில்கள் இடிக்கப்படுவதற்கு பதிலாக, கோயில்களை அழகு படுத்தும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் செல்போன் தரவுகள் பெகாசஸ் ஸ்பைவேர் என்ற செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து, மத்திய அரசு உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளியிடும். திமுக குறித்து விமர்சித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளம்பரம் தேடுவதாக  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் கருத்துக்கு, பாஜகவையும் பிரதமரையும் திமுகவினர் விமர்சிப்பது விளம்பரத்துக்காகவா?” எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “கொங்குநாடு விவகாரத்தில் தனக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் இருக்க முடியாது. கட்சியின் பொறுப்பாளராக கட்சியின் கருத்தை தான் பிரதிபலிக்கத் தான் முடியும். தமிழ்நாட்டை தனியாக பிரிக்க வேண்டும் என நாங்கள் (பாஜக) நினைக்கவில்லை. ஆனால் கொங்கு பகுதி மக்களின் வளர்ச்சி, தேவைகள், அபிலாஷைகள் எனச் சொல்லப்படுகிற பல்வேறு பிரச்சனைகள் பல ஆண்டுகளாக ஏக்கமாக உள்ளது. வருங்காலத்தில் மாநில அரசு அவற்றை எவ்வாறு நிறைவேற்ற போகிறதா என்பதை பொறுத்தே கொங்குநாடு குறித்து அடுத்தகட்ட பரிசீலனை வரலாம்.”

கொங்குநாடு தேவை உள்ளதா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், “எல்லா பகுதிக்கும் தேவை உள்ளது. நாங்கள் இந்த பகுதியின் வளர்ச்சியைப் பற்றி பேசுவோம். பாஜகவின் நிலைப்பாட்டை ஏற்கனவே சொல்லியுள்ளோம்” எனப் பதிலளித்தார்.