Vachathi Case: வாச்சாத்தி வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து 19 பேர் உச்சநீதிமன்றத்தில் மேற்முறையீடு செய்துள்ளனர்.


வாச்சாத்தி வழக்கு:


1990-ஆம் ஆண்டுளில் சந்தனமரக் கடத்தல் வீரப்பன் நடமாடி வந்த தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் வாச்சாத்தி கிராம‌‌த்தைச் சேர்ந்த மக்கள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதாக தமிழக வனத்துறையினர் புகார் தெரிவித்தனர். இது குறித்து விசாரிப்பதற்காக காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களின் உதவியுடன் 1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதியன்று ஒட்டுமொத்த கிராமத்தையும் சுற்றிவளைத்து பலமணி நேரத் தேடுதல் வேட்டையை நடத்தினர். இதன் முடிவில், வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த 133 பேரை கைது செய்தனர். அவர்களில் 90 பேர் பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள் ஆவர்.


அதேசமயம், சந்தனக் கட்டை கடத்தலுக்கும் தங்களுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்த வாச்சாத்தி கிராமத்தினர், இந்த விசாராணை மற்றும் தேடுதல் நடவடிக்கையின்போது கூட்டுக்குழுவில் இடம்பெற்ற வனத்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள், வாச்சாத்தியைச் சேர்ந்த 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்தனர்.மேலும் கிராம மக்கள் அனைவரும் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகவும், அவர்களின் குடிசைகள் தகர்க்கப்பட்டு, வீட்டிலிருந்த பொருட்கள் நாசப்படுத்தப்பட்டதாகவும்  குற்றம் சுமத்தினர். இந்த புகார்களை அன்றைய மாநில அரசு ஆரம்பத்தில் மறுத்தது. அதே சமயம் இதுதொடர்பாக 1992 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி முறையான புகார் பதிவு செய்யப்பட்டது.


தண்டனை உறுதி செய்த ஐகோர்ட்:


இதில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக தருமபுரி மாவட்ட விசாரணை நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிபதி அறிவித்தார். இவர்களில் 12 பேருக்கு 10 ஆண்டுகளும், ஐந்து பேருக்கு ஏழு ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது.


இதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி தீர்ப்பு அளித்தார். அதன்படி, விதிக்கப்பட்ட  தண்டனையை உறுதி செய்து தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்றும் ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.


உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு:


இதில், அரசு வேலை அளிக்க இயலாத பட்சத்தில், சுயதொழில் தொடங்க அரசு உதவி செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கும் 10 லட்ச ரூபாய் நிவாரணத்தில், ரூ.5 லட்சத்தைக் குற்றவாளிகளிடம் இருந்து வசூல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை  நிறுத்தி வைக்கக் கோரி 19 பேர் உச்சநீதிமன்றத்தில் மேற்முறையீடு செய்துள்ளனர்.  வனத்துறை அதிகாரி சிதம்பரம் உள்ளிட்ட 19 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கில் முதன்மையான குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்ற இந்திய வனத்துறை அதிகாரி (ஐ.எஃப்.எஸ்.) எல்.நாதன் தனது தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். நாதனின் மேல்முறையீட்டு மனு திங்கட்கிழமை நீதிபதி கே.விஷ்வநாதன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.