ஆட்சி மற்றும் அதிகாரத்தை முன்னிறுத்தப்படும் உத்தியாக ‘தீண்டாமை அரசியல் ’மாறிவிட்டது. இங்கு நிலவும் சமுதாய பொருளாதார சமமற்ற தன்மை நீங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.


நாட்டின் 75-வது சுதந்திர தினம் ‘அம்ரித் மகோத்சவ்’(Azadi Ka Amrit Mahotsav) என்ற பெயரில் கொண்டாடப்பட உள்ளது.  நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. இந்நிலையில், நேற்று ஆளுநர் மாளிகையில் நடந்த காந்தியின் தத்துவம் என்ற தலைப்பில்  நிர்மலா தேஷ்பாண்டே நினைவு தினம் மற்றும்  காந்திய கோட்பாடுகள் விழிப்புணர்வு (Didi Nirmala Deshpande Memorial Day and Awareness Compaign) நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை ஹர்ஜன சேவா சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.


அப்போது அவர் பேசுகையில், “தீண்டாமை அரசியல் இங்கு அதிகாரத்துக்காக பயன்படுத்தப்படுகிறது" என  பேசியுள்ளார். மேலும், சமூக மோதல் பதற்றத்தை தணிக்க மக்களிடையே வளர்ச்சி இடைவெளியை குறைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி  காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே (Nirmala Despande) அவர்கள் இச்சமூகத்திற்கு ஆற்றிய சேவை அளப்பறியது என்று கூறினார்.


மேலும்,  இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி  பேசியதாவது:


நிர்மலா தேஷ்பாண்டே வினோபாபாவே அவர்களுடன் இணைந்து இந்த சமூகம் உயிர்புடன் இருப்பதற்கும், மேம்படுவதற்கும் காந்திய கோட்பாடுகளைப் பின்பற்றி தன் பங்களிப்பை ஆற்றியவர். இன்னும் காந்திய கோட்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது. காந்திய கோட்பாடுகள் மற்றும் அவரின் மதிப்புமிக்க சிந்தனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன்  மூலம் இச்சமூகத்தில் ஏழை எளிய மக்களுக்கு நீதி கிடைக்கவும், அவர்களின் வாழ்க்கை மேம்படவும் பெரும் உதவியாக இருக்கும்.


இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, காந்தியடிகள், இந்த நாடு தீண்டாமை இல்லாத, பேதங்களின் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுத்தினார். இந்தியா சமூக நீதியுடன், பொருளாதாரத்தில் செழுமையான வளர்ச்சி, அரசியல் உறுதித்தன்மை,அனைவருக்குமான சமூக உரிமைகள் ஆகியவற்றை கொண்ட நாடாக இருக்க என்பது காந்தியின் கனவாக இருந்தது. காந்தியின் கோட்பாடுகள்படி இந்தியைவை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.


ஆட்சி, அதிகாரம் என்பது உண்மையில் சமூகத்திற்கு சேவையாற்றுவதற்காகவே இருக்க வேண்டும். ஆனால். இங்கு தீண்டாமை அரசியலை முன்னிருத்தி செய்யப்படும் ஒரு யுக்தியாக மாறிவிட்டது. சமூகத்தில் நிலவும் பாகுபாடு ஒழிக்கப்பட வேண்டும். சமூக பொருளாதார வளர்ச்சியில் நிலவும் பாகுபாட்டையும், இடைவெளியையும் வேரறுக்க வேண்டியது அவசியம்.இதன் மூலம் இச்சமூகத்தில் ஏற்படும் பதற்றத்தை இல்லாமலாக்க உறுதிப்பத வேண்டும்.


இந்தியாவின் 75 வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடிவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ’Sabka Saath – Sabka Vikas’என்ற இலக்குடன் மக்களுக்கு பயன்படும் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். உணவு , உடை, கல்வி, ஆரோக்கியன், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்திலும் பாகுபாடுஇல்லாமல் அனைவருக்கும் எல்லாலும் கிடைக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


இந்நிகழ்ச்சியில், தக்கர் பாபா வித்யாலயா தலைவர் எஸ். பாண்டியன் மற்றும் நிர்வாகிகள், ஹர்ஜன சேவா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.