சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (42). இவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தனலஷ்மி (38). இவர்கள் தங்களது இரண்டு பிள்ளையுடன் வசித்து வருகின்றனர். ஆட்டோ ஓட்டுநரான தியாகராஜன் அவ்வபோது, பெயின்டர் வேலையும் செய்து வந்துள்ளார். அடிக்கடி இரண்டு வேலைக்கும் செல்லாமல் தியாகராஜன் இருந்து வந்துள்ளார். மனைவி தியாகராஜன் முறையாக ஏதாவது ஒரு வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தினாலும் அவருடன் சண்டையிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டு கொண்டுள்ளார்.



 

இந்நிலையில் தியாகராஜனுக்கு அவ்வப்போது இருந்து வந்த குடிப்பழக்கம் தீவிரமடையத் தொடங்கியது. கடந்த சில மாதங்களாக குடி பழக்கத்திற்கு முழுமையாக அடிமையான தியாகராஜன் வேலைக்கு செல்லாததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த தியாகராஜன் மனைவி தனலஷ்மியை வேலைக்கு செல்ல வற்புறுத்தியதால் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

 



 கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மதுபோதையில் இருந்த கணவன் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை குத்தி கொலை செய்துள்ளார். கணவனால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனலஷ்மியின் கூக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனே அருகிலுள்ள கண்ணகி நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 



இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குடிபோதையில் இருந்த தியாகராஜனை கைது செய்தனர். பின்னர் தனலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை கொலை செய்த கணவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்