தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கியிருக்கும் கட்சி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.

Continues below advertisement

குற்ற விவரங்களை வெளியிட்ட தவெக:

மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட விஜய்யின் இந்த முதல் அரசியல் போட்டி ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் மீதும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் ஒவ்வொரு வேட்பாளரும் வேட்புமனுத் தாக்கலின்போது தங்களுடைய சொத்து மதிப்புகளுடன், தங்கள் மீதான குற்ற வழக்குகள் பற்றிய முழு விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை. 

இந்த சூழலில், தவெக சார்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகளின் முழு விவரத்தையும் தவெக கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சியே தனது வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகளின் முழு பட்டியலையும் வெளியிடுவது இதுவே முதன்முறை ஆகும். 

Continues below advertisement

மற்ற கட்சியினர் வெளியிடுமா?

தங்களது வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குளை அரசியல் கட்சி ஒன்றே தாமாக வந்து வெளியிட்டிருக்கும் இந்த தவெக-வின் செயல்பாட்டிற்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். தவெக போல தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தவெக பலமிகுந்த திமுக கூட்டணி, பலமிகுந்த அதிமுக கூட்டணி, தனி வாக்கு வங்கி கொண்டுள்ள நாம் தமிழர் ஆகியோரை எதிர்த்து களமிறங்குகிறது. இதனால், ஒவ்வொரு தொகுதியிலும் நாளுக்கு நாள் தவெக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இணையத்தில் தீ, களத்தில் அமைதி:

இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் தவெக-வினர் பிற கட்சியினர் மீதான குற்றச்சாட்டுக்கள், பிற கட்சியினருக்கு எதிரான பரப்புரையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். அதேசமயம், தமிழ்நாட்டில் களத்தில் அவர்களது பரப்புரை மிகவும் தொய்வாகவே இருப்பதாக கருதப்படுகிறது. விஜய்யின் தனிப்பட்ட செல்வாக்கே அவர்களது பலமாக இருக்கும் சூழலில், திமுக மற்றும் அதிமுக அளவிற்கு அவர்களுக்கு பூத் கமிட்டி கட்டமைப்பு இன்னும் சில இடங்களில் இல்லாதது பலவீனமாக உள்ளது.