தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில் தேர்தல் என்றாலே பரப்புரை அனல்பறக்கும். இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அந்த பரபரப்பிற்கு முக்கிய காரணமாக  உருவெடுத்திருப்பவர் விஜய்.

Continues below advertisement

விஜய் நாளை பரப்புரை:

முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. விஜய், செங்கோட்டையன் தவிர மிகப்பெரிய முகங்கள் அந்த கட்சியில் இல்லாவிட்டாலும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முக்கிய நிர்வாகிகளாக உள்ளனர். தனது வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜய் தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். 

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் பரப்புரையில் ஈடுபட்டபோது, அவரது வில்லிவாக்கம் பரப்புரை ரத்தானது. இந்த நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவிற்கு ஆதரவாக விஜய் நாளை மீண்டும் பரப்புரையில் ஈடுபட உள்ளார். தற்போது வில்லிவாக்கம் தொகுதிக்கான பரப்புரைக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது.

Continues below advertisement

18 நாட்கள்:

மேலும், அண்ணாநகர், விருகம்பாக்கம் மற்றும் தி.நகர் தொகுதியில் விஜய் பரப்புரையில் ஈடுபட காவல்துறையிடம் அனுமதி கோரியுள்ளனர். அந்த தாெகுதிகளிலும் பரப்புரையில் ஈடுபட அனுமதி கிடைத்தால் விஜய் அங்கு பரப்புரையில் ஈடுபடுவார். வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார்.

தேர்தலுக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில், விஜய் அடுத்தடுத்த நாட்களில் தனது பரப்புரையை மேலும் தீவிரப்படுத்த உள்ளார். தென் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அவர் தனது பரப்புரையை வலுப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வலுவாக உள்ள  பகுதிகளில் அவர் தனது பரப்புரையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

பலத்த பாதுகாப்பு:

விஜய்யின் பரப்புரையின்போது போதியளவு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தவெக-வினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனால், அவருக்கு பரப்புரையின்போது உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், விஜய் பரப்புரையின்போது அவரைப் பார்க்க தவெக-வினர் மட்டுமின்றி அவரது ரசிகர்கள் அதிகளவு கூடுவதால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஏற்பவும் காவல்துறை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

விஜய் மட்டுமின்றி முதன்முறை தேர்தல் களத்தில் குதித்துள்ள தவெக-வினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்காக கட்சியின் முக்கிய பிரமுகர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய் மட்டுமின்றி மற்ற அரசியல் தலைவர்களான மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின், சீமான் மற்றும் முக்கிய கட்சித் தலைவர்கள் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.