விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மண்ணுக்கும், மக்களுக்கும் நலன் பயக்கும் வகையில் தவெக மாநாடு அமையட்டும் என சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தை தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை, அதன் தலைவர் விஜய் கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை, பனையூரில் அறிமுகம் செய்தார். 


விஜய்க்கு வாழ்த்து சொன்ன சீமான்:


விஜய்யின் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது. கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை நடத்த உள்ளார் விஜய். அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது.


இந்த நிலையில், தவெகவின் முதல் மாநாட்டுக்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "அரசியல் மாற்றமெனும் பெருங்கனவோடு ஆருயிர் இளவல் விஜய்யின் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!


 






தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பேரறிவிப்பு தமிழ்நாட்டு மண்ணுக்கும், மக்களுக்கும் நலன் பயக்கட்டும்! தம்பி விஜய்யின் நம்பிக்கையும், நல்நோக்கமும் ஈடேறட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.


எதிர்பார்ப்புகளை கிளப்பும் தவெக மாநாடு:


தமிழ்நாடு அரசியல் களத்தை பொறுத்தவரையில், ஆளுங்கட்சியாக உள்ள திமுக, பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் என நான்கு முனை அரசியல் இருந்து வருகிறது.



இப்படியிருக்க, நடிகர் விஜயின் அரசியல் நுழைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய், யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.