தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் “தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா”வில் அக்கட்சியின் தலைவர் விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டினார். 


2ஆம் ஆண்டாக நடக்கும் நிகழ்ச்சி 


கடந்தாண்டு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் 3 மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியர்களை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சி இந்திய அளவில் மிகுந்த பாராட்டைப் பெற்றது. இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கினார். தொடர்ந்து சினிமா, அரசியல் என பயணப்பட்டு வரும் அவர் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2ஆம் ஆண்டாக மாணவ, மாணவியர்களை கௌரவித்துள்ளார். 






சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க அதிகாலையிலேயே விஜய் வருகை தந்தார். இன்று நடக்கும் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், கோயம்புத்தூர், இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, ஈரோடு, தேனி, தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி,சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை, மரக்கன்று ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை மதிய விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


இந்நிகழ்ச்சியில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், "எதிர்கால தமிழகத்தில் இளம் மாணவ, மாணவிகளை சந்திப்பதில் ஒரு மகிழ்ச்சி. பாசிட்டிவான மாணவர்களை சந்திக்கும்போது ஒரு மாற்றம் நடக்கும் என சொல்வார்கள். அது இன்று காலை முதல் எனக்குள் வேலை செய்துக் கொண்டிருக்கிறது. நீங்க எல்லாரும் அடுத்த ஒரு கட்டம், உங்கள் கேரியரை தேர்வு செய்யும் நிலைக்கு செல்கிறீர்கள். உங்களில் சிலருக்கு அடுத்த நிலை பற்றிய தெளிவான முடிவு இருக்கும். சிலருக்கு குழப்பம் இருக்கும். எல்லா துறைகளும் நல்ல துறைகள் தான். இதுதொடர்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், துறை சார்ந்த நிபுணர்களிடம் பேசுங்கள். 


தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் மட்டும் நல்ல படிப்புகள் இல்லை. உலக அளவில் துறை சார்ந்த சிறந்தவர்கள் இருக்கிறார். இங்க நமக்கு எது அதிகம் தேவைப்படுகிறது என்றால் நல்ல தலைவர்கள் தான். நான் அரசியல் ரீதியாக சொல்லவில்லை. படிப்பு துறைகள் ரீதியாக சொல்கிறேன். எதிர்காலத்தில் அரசியலும் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும் துறை ரீதியான தேர்வாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்நல்ல படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நல்ல படித்தவர்கள் தலைவராக வர வேண்டும். இப்போதைக்கு படியுங்கள், மீதியை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். படிக்கும்போது நீங்கள் மறைமுகமாக அரசியலில் ஈடுபடலாம். ஒரு செய்தியை தகவல் வேறு, கருத்து வேறு என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்” என விஜய் தெரிவித்தார்.