முதலமைச்சர் விஜய்யை தரக்குறைவாக பேசிய குற்றச்சாட்டிற்காக விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் தவெக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்த சூழலில், தவெக ஐடி விங் திமுக-விற்கு பதில் தரும் வகையில் விளக்கம் அளித்துள்ளது. அதில் பதிவிட்டுள்ளதாவது,
ஆபாசப் பேச்சாளர்கள்:
அரசியலை வியாபாரமாகவே செய்துவரும் Vending machine தி.மு.க. இப்போது தன் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்களை வன்மம் ஊட்டி வளர்த்து வருகிறது. கேட்டால், அதுதான் எதிர்க்கட்சி ஜனநாயகம் என்று எகத்தாளம் பேசுகிறது.
மேல்மட்டத் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகம் வரை தரைமட்டத்திற்கும் கீழே சென்று அநாகரிக அரசியல் புரிந்து வருவதை நம் தமிழக மக்களும் தினம் தினம் பார்த்தே வருகின்றனர். ஆனால், வழக்கம்போல மக்களை மறந்து தான் என்ற திமிரில் தி.மு.க. வழக்கம்போல அராஜகம் செய்து வருகிறது.
அதிகார மமதை:
ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு, ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றி தி.மு.க. செயல்பட்டதால்தான் இப்போது அவர்கள் அதன் விளைவுகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இருந்தும், அதிகார மமதை இன்னும் தலையை விட்டு இறங்காமல், இப்போதும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று காவல்துறையையே பகிரங்கமாக மிரட்டி அறிக்கை விடுகிறார் ஸ்டாலின் சார்.
சத்திய ஆட்சி எது? சாத்தானின் ஆட்சி எது? என்று மக்களுக்கே தெரியும் என்பது ஸ்டாலின் சாருக்கே தெரியும். அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு வழக்கு போட்டதால், ஒழுங்காகப் படித்துவிட்டு வாருங்கள் என்று சுப்ரீம் கோர்ட் ஓங்கி அடித்ததை மறந்துவிட்டு ஊருக்கு உபதேசம் செய்யத் தொடங்கிவிட்டனர் தீயசக்தி தி.மு.க.வினர்.
வென்டிங் மெஷின்:
நீதிநெறி மறந்து அரசியல் Vending machine ஆன தி.மு.க. விதைத்து வருகிற வினைகளை விரைவில் மேன்மேலும் அறுவடை செய்யத்தான் போகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விளாத்திக்குளம் எம்எல்ஏ கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனநாயக பண்புகள் அறவே இன்றி தவெக செயல்படுவதாகவும், தமிழ்நாட்டில் நடப்பது சாத்தான் ஆட்சியா? சட்டத்தின் ஆட்சியா? என்று கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
