தமிழ்நாட்டில் புதியதாக அமைந்துள்ள தவெக அரசு எதிர்கொண்டுள்ள மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று நிதி நிலைமையை சீர்செய்வது ஆகும். கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வாங்கப்பட்ட பல்வேறு கடன்களால் தமிழகத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடிக்கும் மேல் உள்ளது.

Continues below advertisement

கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள்:

இந்த சூழலில், தமிழ்நாட்டின் வருவாயைப் பெருக்குவதற்கு விஜய் தலைமையிலான தவெக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக பிரபல பொருளாதார நிபுணர் மான்டேக்சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

அறநிலையத்துறை மூலமாகவும் வருவாயைப் பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பழம்பெரும் கோயில்களுக்கு சொந்தமாக பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் இந்த கோயில் நிலங்களை அறநிலையத்துறையே நிர்வகித்து வருகிறது.

Continues below advertisement

சோலார் மின் உற்பத்தி நிலையங்கள்:

இந்த நிலையில், அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களில் விவசாய பயன்பாடு இல்லாமல் காலியாகவே உள்ள நிலங்களின் விவரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 10 ஏக்கருக்கு மேல் காலியாக உள்ள இடங்களில் சோலார் மின் உற்நத்தி நிலையங்கள் அமைக்க முடிவு செய்துள்ளனர், இதற்காக ஆய்வுக்கூட்டம் நடத்தி அமைச்சர் ரமேஷ் நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளார்.

இதற்காக அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கும் அறநிலையத்துறை ஆணையர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டின் மின் தேவைக்கான மின்சாரம் கிடைப்பதுடன் இதன் மூலம் அறநிலையத்துறையின் வருவாயும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த சோலார் மின் நிலையம் அமைக்கப்பட்டால் தமிழ்நாட்டிற்கு அதிகளவு மின்சாரம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. இந்த மின்சாரத்தை தொழில்துறை, வீட்டுப்பயன்பாடு போன்ற அத்தியாவசிய பயன்பாட்டிற்கு பகிர்ந்து பயன்படுத்துவார்கள் என்றும் கருதப்படுகிறது.

வெளிப்படைத்தன்மை

பழனி கோயில் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்களின் பயன்பாட்டில் வெளிப்படைத் தன்மையும், எந்தவித குளறுபடியும் நடந்துவிடக்கூடாது என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

வேறு வடிவத்திலும் வருமானம்:

இந்த வருவாயை தமிழக அரசின் அறநிலையத்துறைக்கு கீழே மேற்கொள்ளப்படும் நலத்திட்டங்கள், அந்த துறைக்கான செலவினங்களுக்கு உதவும் என்று கருதப்படுகிறது. அறநிலையத்துறைக்கு சொந்தமான காலி நிலங்களை சோலார் பயன்பாடு மட்டுமின்றி வேறு எந்தெந்த வடிவங்களில் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம்? என்றும் தொடர்ந்து அதிகாரிகளுடன் அமைச்சர் ரமேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அறநிலையத்துறை மட்டுமின்றி மற்ற துறைகள் மூலமாகவும் வருவாயைப் பெருக்குவதற்கான பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.