மாநில உரிமைகளில் சமரசமே இல்லை என்று அறிவித்துவிட்டு அரசியலுக்கு வந்த இயக்கம் தமிழக வெற்றிக் கழகம். பதவிக்காக பா.ஜ.க.வின் கால்களில் விழுந்து வணங்கி, பம்மிப் பதுங்கித் தவழ்ந்தே பதவியைக் காப்பாற்றிக்கொண்டவர் நம்மைப் பார்த்துப் பேசுவதென்பது காமெடி என்று எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து தவெக அறிக்கை வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

காங்கிரஸ் தயவில் தமிழ்நாட்டை ஆண்டு வரும் பொய்க்கால் குதிரை அரசு காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பேச முடியுமா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்த நிலையில், அதுதொடர்பாக தவெக சார்பில் அக்கட்சியின் ஐடி விங் எதிர்வினையாற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘மாநில உரிமைகளில் சமரசமே இல்லை என்று விக்கிரவாண்டி மாநாட்டிலேயே அறிவித்துவிட்டு அரசியலுக்கு வந்த இயக்கம் தமிழக வெற்றிக் கழகம். மக்கள் உரிமைகளையும் நலன்களையும் மனதிலும் மூளையிலும் சுமந்து நிற்கும் இயக்கமே நம் த.வெ.க. நிலம், நீர் உள்ளிட்ட இயற்கை சார்ந்த வளங்களைப் பாதுகாப்பதிலும் அதற்கான உரிமைகளைக் காப்பதிலும் யாருக்கும் சளைத்தவர் இல்லை நம் தமிழ்நாடு முதலமைச்சரான வெற்றித் தலைவர். ஆகவே, காவிரி முதற்கொண்டு அனைத்து நீர்வள உரிமைகளை எவரிடத்திலும் அடகு வைக்கவும் மாட்டார். எதற்காகவும் அடிபணிந்தும் போகமாட்டார். மக்கள் மனங்களை அறிந்து மக்களுடன் மக்களாக நின்று களம் கண்டு வென்று, ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற சமூக நீதிக் கோட்பாட்டை அமைச்சரவையில் இருந்தே செயலில் காட்டித் தொடங்கியதுதான் நம் வெற்றித் தலைவரின் மனசாட்சி உள்ள மக்களாட்சி.

Continues below advertisement

 

மக்களுக்காக உழைப்பதற்காக, பொதுமக்கள் கால்களால் அமைந்திருக்கும் இந்த அரசைப் பொய்க்கால் குதிரை அரசு என்று விமர்சிப்பது யார் தெரியுமா?. மற்றும் பலரில் இருந்து மற்றும் சிலராகி இப்போது ‘மற்றபடி நான் மட்டுமே’ என்று தவிதவித்துப் பரிதவித்து தன்னந்தனியாகி நிற்கும் ஒருவர்தான். பதவிக்காக பா.ஜ.க.வின் கால்களில் விழுந்து வணங்கி, பம்மிப் பதுங்கித் தவழ்ந்தே பதவியைக் காப்பாற்றிக்கொண்டவர் நம்மைப் பார்த்துப் பேசுவதென்பது விலாநோக வெடித்துச் சிரிக்க வைக்கும் காமெடி. நம் வெற்றித் தலைவரின் மனசாட்சி உள்ள மக்களாட்சிக்கு கூட்டணி, கொள்கை, மாநில உரிமை என்பதில் உள்ள வேறுபாடுகளைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்து புரிந்த ஆட்சி. எனவே, மாநிலம் மற்றும் மக்கள் சார்ந்த உரிமைகளில் எப்போதும் உஷாராகவே இருக்கும். மக்களுக்கும் மாநிலத்திற்கும் விசுவாசமாகவே இருக்கும். இது விசுவாசிகளுக்கு மட்டுமே புரிந்த உண்மை. எனவே, எப்போதும் ஏற்றி விட்டவர்களை எட்டி உதைக்கும் விஷவாசிகளுக்கு இது புரிய வாய்ப்பே இல்லை’ என்று கூறப்பட்டுள்ளது.