மக்களாட்சியை ஆதாரமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சாசனம், 26.1.1950 அன்று அமலுக்கு வந்தது. அந்த தினம், குடியரசு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.


நாடு முழுவதிலும் நாளை (26-ம் தேதி) 74-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் சென்னை  மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் குடியரசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இந்தாண்டு மெட்ரோ பணிகள்  காரணமாக இடம் மாற்றம் செய்யப்பட்டு உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறுகிறது. இதையொட்டி ஜனவரி 20, 22 மற்றும் 24-ம் தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும் என்று காவல் துறை அறிவிப்பு வெளியிட்டது.


நாளை காலை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருவார். பின் தமிழ்நாடு ஆளுநரை வரவேற்பார். தென்னிந்திய பகுதிகளின் ராணுவ மேஜர் ஜெனரல், கடற்படை அதிகாரி, தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி, கடலோர காவல்படை (கிழக்கு) கமாண்டர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை கவர்னருக்கு சம்பிரதாயப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைப்பார். அதை தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் தேசிய கீதம் ஒலிக்க மூவரண கொடியை ஏற்றி வைப்பார். 


தொடர்ச்சியாக முப்படை வீரர்கள், காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு நடைபெறும். இந்த வருடம் பெண்கள் சிறப்பு காவல் படையின் கூட்டுக்குழு முரசு இசை நிகழ்ச்சியானது சேர்க்கப்பட்டுள்ளது.


2000 த்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் மெரினா கடற்கரை பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். குடியரசு தின விழா அன்று மெரினா கடற்கரை பகுதிகளுக்கு வரும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்படுகிறது.


பின்பு சீருடை பணியாளர்கள், சமூக பணியாளர்கள் உள்ளிட்ட துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளும்,பதக்கங்களும்,காசோலையும் வழங்கப்படும். கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பள்ளி , கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த ஆண்டு  பள்ளி,கல்லூரி மாணவிகளின் மயிலாட்டம் காவடியாட்டம் பொய்க்கால் ஆட்டம் , பிற மாநிலங்களான ராஜஸ்தான் மகாராஷ்டிரா ஒடிசா போன்ற மாநிலங்களின் நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.


அதை தொடர்ந்து துறை சார்ந்த 21 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும்.


செய்தி மக்கள் தொடர்பு துறை சார்ந்த இரண்டு வாகனங்கள், காவல் துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சுற்றுலாத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறை, பொதுத் தேர்தல்கள் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, வனத்துறை, இந்து சமய அறநிலையத் துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, நெய்வேலி லிக்னைட் கார்பரேசன் லிமிடெட், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வாகனங்களின் அணி வகுப்பு நடைபெறும்.