தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளை விக்கப்படும் தக்காளியை விவசாயிகள், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் நாள்தோறும் சுமார் 100 டன் வரை  விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் இருந்து சென்னை, பெங்களூர், ஓசூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 

 



 

தருமபுரி மாவட்டத்தில் உற்பத்திப் பொருட்கள் பலவும் ஆண்டுக்கு ஆண்டு சீரான விலையேற்றம் காணும். ஆனால், வேளாண் உற்பத்திப் பொருட்களான காய்கறிகள், பழங்கள் போன்றவை நிலையற்ற விலைத் தன்மையை கொண்டுள்ளன. அவற்றில் தக்காளியும் அடங்கும். தமிழகத்தில் அன்றாட உணவுத் தயாரிப்புக்கான பொருட்களில் தக்காளி முக்கிய இடம் வகித்தபோதும் அதற்கான விலை மற்றும் நிரந்தரமற்ற நிலையிலேயே இருக்கும். அந்த வகையில் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை வேகமாக சரியத் தொடங்கியது. படிப்படியாக விலை இறக்கம் ஏற்பட்டு கடந்த சில நாட்களாக உழவர் சந்தைகளில் கிலோ 5 ரூபாய் என்ற விலையில் தக்காளி விற்பனையாகிறது. வயல்களில் மொத்தமாக தக்காளியை வாங்க வரும் வியாபரிகள் விவசாயிகளுக்கு கிலோவுக்கு  1 ரூபாய் முதல்  2 ரூபாய் வரை மட்டுமே விலை கொடுக்கின்றனர்.

 

விவசாய பணிகளில் ஈடுபடும் பெண் ஆட்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால், தக்காளியை கிலோ ரூ.2-க்கும் குறைவான விலைக்கு விற்கும்போது ஆட்களுக்கு வழங்கும் கூலியைக் கூட அந்த காசு மூலம் ஈடு செய்ய முடியாது. முதலீடு, மருந்து செலவு, பராமரிப்புச் செலவு உள்ளிட்ட செலவினங்களை கணக்குப் பார்த்தால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதுதவிர, தினமும் மனதளவில் பெரும் வேதனையையும் அனுபவிக்கும் நிலை உருவாகிறது. இதில் இருந்தெல்லாம் விடுபட்டு, அடுத்த சாகுபடிக்கு நிலத்தை தயார் செய்யும் நோக்கத்துடன் பூவும், பிஞ்சும், பழமுமாக உள்ள செடிகளையும் சேர்த்து  அப்படியே டிராக்டர் மூலம் உழவடிக்கத் தொடங்கியுள்ளனர்.

 



 

 

 

மேலும் உழவின்போது வீணாகும் பழங்கள் யாருக்கேனும் பயனளிக்கட்டும் என்று, சுற்று வட்டாரத்தில் வசிப்பவர்களை பறித்துச் செல்ல அனுமதித்துள்ளனர். இதனால் அருகில் உள்ள மக்கள் தக்காளியை பறித்து மூட்டை, மூட்டையாக எடுத்து வண்டியில் எடுத்து செல்கின்றனர். ஒருசில பகுதிகளில் இலவசமாக கொடுத்தால் கூட வாங்குவதற்கு ஆள் இல்லை. ஆண்டுதோறும் ஒரு பருவத்தில் மட்டுமே தக்காளி விலை உச்சத்தை தொடரும். ஆனால் மற்று பருவங்களில் விலை கடுமையாக குறைந்துவிடும். தக்காளி விலையேற்றம் கண்டால், சட்டமன்றத்தில் பேசி, விலை குறைப்பதாகவும், இறக்குமதி செய்வதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் விலை குறைந்தால், அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. 

 



 

 

இதனால் தக்காளியை அறுத்து கீழே கொட்டுவதும், கால்நடைகளை கட்டி மௌப்பதும், அப்படி உழவு ஓட்டுவதுமாக விவசாயிகளின் நிலையுள்ளது. இதனால் தக்காளிக்கு  குறைந்தபட்ச ஆதார விலையை அரசு உருவாக்குவது மட்டுமே, தக்காளி விவசாயிகளின் இந்த வேதனைக்கு தீர்வாக அமைய முடியும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.