தமிழகத்தில் சில நாட்களாக குறைந்து வந்த தக்காளியின் விலை தற்போது மீண்டும் ஏற்றம் கண்டு வருகிறது. 


தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி விலை கணிசமாக உயர்ந்து காணப்பட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு கிலோ ரூ.140 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு விலை குறைந்து கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.


இந்தநிலையில், தக்காளியின் விலை தற்போது மீண்டும் ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று ஒரு கிலோ தக்காளி விலை ரூ. 75 லிருந்து ரூ.90 வரை விற்பனையானது. விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை ஏறுமுகத்திலேயே இருப்பதாகவும் இனி வரக்கூடிய நாட்களின் தக்காளின் விலை ஏற்ற இறக்கத்துடனேயே இருக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 




அதேபோல் மற்ற காய்கறிகளின் விலைவாசியும் கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.180 வரை விற்கப்பட்டது. மும்பையில் இருந்து மட்டுமே முருங்கைக்காய் கொண்டு வரப்படுகிறது. அதன் வரத்து குறைந்து வருவதால் விலையில் ஏற்றம் கண்டுள்ளது. 


பீன்ஸ், அவரைக்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய், குடைமிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் இன்றோ அல்லது நாளையோ ரூ.100 ஐ கடந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது ஒரு கிலோ ரூ. 80 முதல் 90 வரை விற்கப்படுகிறது. கேரட், பீர்க்கங்காய், கோவைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய், நூக்கல்ஸ் ஆகியவற்றின் விலை ரூ. 50 க்கு மேல் விற்கப்படுகிறது. 


கனமழை, வரத்து குறைவு காரணமாக காய்கறியின் விலை உயர்ந்துவருகிறது. இன்னும் சில நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே நாளில் தக்காளி விலை ரூ. 16க்கும் பீன்ஸ் ரூ.35க்கும் அவரைக்காய் ரூ.40க்கும் விற்கப்பட்டது. 


நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம்:


பல்லாரி - ரூ. 26
தக்களி - ரூ. 90
உருளைக்கிழங்கு - ரூ. 18 
சாம்பார் வெங்காயம் - ரூ. 45-65
கேரட் - ரூ. 40 - 75
பீன்ஸ் - ரூ. 80 - 90 
பீட்ரூட் - ரூ.35 - 55
சவ்சவ் - ரூ.25 
வெண்டைக்காய் - ரூ. 60 - 80
கத்திரிக்காய் - ரூ. 60 - 90